பிறக்கையில் 763 கிராம், 3 முறை மாரடைப்பு, நிமோனியா: ஒரு பிஞ்சுக் குழந்தையின் போராட்டம்
பெங்களூர்: பெங்களூரில் குறை பிரசவத்தில் 762 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை 3 முறை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிபவர் சவ்ரவ் வியாஸ். அவரது மனைவி நேஹா வியாஸ். கர்ப்பமாக இருந்த நேஹா 6வது மாதத்தின்போது ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். அப்போது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டதாக அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் உயிரை காக்க வேண்டும் எனில் குறைப்பிரசவத்தில் அதை வெளியே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி 7 மாத கர்ப்பிணியான நேஹாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 762 கிராம் எடையுடன் பிறந்தது. மேலும் அதன் நுரையீரல் வளர்ச்சி அடையவில்லை. இதையடுத்து குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அப்போது குழந்தைக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது, மேலும் நிமோனியாவாலும் அவதிப்பட்டது. இத்தனை அவதிகளையும் தாண்டி குழந்தை உயிர் பிழைத்துள்ளது.
பிறந்து ஆறு மாதமாகும் அந்த குழந்தைக்கு அட்டு என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை தற்போது 3.46 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.
இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில்,
தீவிர சிகிச்சைப் பிரிவில் முதன்முதலில் என் குழந்தையை பார்த்தபோது இவ்வளவு சிறிய ஜீவன் இத்தனை பிரச்சனைகளை எப்படி எதிர்த்து போராடுகிறது என்று நினைத்தேன். அவன் தற்போது நலமாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.