உலகில் பார்க்கவேண்டிய சிறந்த நகரங்கள் 2015- 2 ஆம் இடத்தில் ஹைதராபாத்
ஹைதராபாத்: 2015 ஆம் ஆண்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய உலக நகரங்கள், இடங்கள் வரிசையில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியாவின் ஹைதராபாத்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பிரிசிடியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. டிராவலர் என்ற சர்வதேச மாகஸின் 2015ம் ஆண்டு பார்க்க வேண்டிய உலகின் மிகச் சிறந்த 20 நகரங்கள், இடங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்தான் ஹைதராபாத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ஜெர்மட், வாஷிங்டனின் நேஷனல் மால், பெருவில் உள்ள கோர்சிகா, சோக்யூகுரா, சானல் தீவில் உள்ள சார்க், ஜப்பானின் கொயசான், ஓக்லஹோமா நகரம், ருமேனியாவில் உள்ள மராமுரஸ் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
தென் கிழக்கு இந்தியாவில் கவிதை போன்ற ஒரு நகரமாக ஹைதராபாத் திகழ்வதாக டிராவலர் கூறுகிறது. மேலும் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான மீர் உஸ்மான் அலிகான் வாழ்ந்த நகரமும் இது என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் ஐடி நிறுவனங்களின் தலைநகராகவும் ஹைதராபாத் திகழ்வதாகவும், தாஜ் பலக்னாமா பாலஸ், இரானி கேப் உள்ளிட்ட பிரபல இடங்களும் இங்கு நிறைந்துள்ளதாகவும் அது புகழ்கிறது.
தற்போது ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகவும் இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக பத்து வருடம் ஹைதராபாத் நீடிக்கும். அதன் பின்னர் அது தெலுங்கானாவுக்குச் சொந்தமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.