மது அருந்துவதற்காக சுற்றுலா பயணிகள் பீகார் வரத் தேவையில்லை: நிதிஷ்குமார் அதிரடி !
பாட்னா: பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கால் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும் என புகார் எழுந்துள்ளது. எனவே நட்சத்திர ஓட்டல் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மது விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதனை மறுத்த அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மது அருந்துவதற்காக சுற்றுலாவாசிகள் பீகார் வரத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பீகாரில் பாதியளவு மதுவிலக்கை அறிவித்தார் முதல்வர் நிதிஷ்குமார். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் சிறிய மற்றும் பெரிய நகரங்களில் விற்பதற்கான அனுமதி மட்டும் நீடித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஏப்ரல் 5 ஆம் தேதி பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார்.

இதையடுத்து மாநிலத்தில் இனி ஹோட்டல்கள், உள்ளிட்ட எந்த இடங்களிலும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பார் லைசென்ஸ்களும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனால், பீகாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தவர்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் எனப் புகார் எழுந்துள்ளது.
முழு மதுவிலக்கால் பீகார் மாநில சுற்றுலா வர்த்தகம் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தொழில் வர்த்தக கூட்டமைப்பினர் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த நிதிஷ், முழுமதுவிலக்கை தளர்த்த முடியாது என மறுத்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு முன் அதனால் ஏற்படும் தாக்கங்களில் ஒவ்வொரு கோணங்களையும் நன்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. முழு மதுவிலக்கு அமலினால் சுற்றுலா பாதிக்கப்படும் என்பதை ஏற்க முடியாது.
ஏனெனில், பீகாருக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாவாசிகள் ஆன்மீகவாதிகள். இவர்கள் பீகாரின் புத்தமத சுற்றுலா தலங்களை பார்வையிடவும், இறந்த தன் உறவினர்களுக்கு பிண்ட தானம் செய்யவும் வருகிறார்கள்.
இவர்கள் இங்கு வந்து மது அருந்த வேண்டிய அவசியமே ஏற்படாது. இதில், சிலருக்காக என ஓட்டல்களில் மதுவை விநியோகிக்க அனுமதித்தால் ஒருசாரருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என பொதுமக்கள் கேள்வி எழுப்புவார்கள். எனவே, மது அருந்துவதற்காக என சுற்றுலாப் பயணிகள் பீகார் வரத் தேவையில்லை என்றார்.
.












Click it and Unblock the Notifications