தேசிய அளவில் முட்டை போட்ட திமுக, பகுஜன் சமாஜ், தேசிய மாநாடு கட்சி!
டெல்லி: மோடி மற்றும் ஜெயலலிதா அலையால் 3 மாநிலங்களில் முக்கிய கட்சிகள் முட்டை வாங்கியுள்ளன.
திமுக
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40ல் 35 தொகுதிகளில் போட்டியிட்டது திமுக. பிற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. தலித் மற்றும் இஸ்லாமியர் ஆதரவு கட்சிகளின் கூட்டணி ஆதரவு இருந்தும் கூட அதிமுகவும், பாஜக கூட்டணியும் மொத்த சீட்டுகளையும் பகிர்ந்துகொண்டன. அதில் அதிமுகவுக்குதான் சிங்கப் பங்கு.
ஜெயலலிதா அலை..
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வந்து சமீபத்தில்தான் கூட்டணியை விட்டு விலகியது திமுக. அதிமுகவுக்கு முன்பு, தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்தது திமுக. அப்படியிருந்தும் முட்டை போட்டுள்ளது அக்கட்சி. ஜெயலலிதா அலைதான் தமிழகத்தில் திமுகவின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
மாயவாதி கதையும் அப்படித்தான்...
வடக்கே உத்தரபிரதேச மாயவாதி கதையும் அப்படித்தான். சமாஜ்வாதி ஆட்சி நடக்கும் அம்மாநிலத்தில் இதற்கு முன்பு மாயவதிதான் முதல்வராக இருந்தார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சியும் முட்டை போட்டுள்ளது. கடந்த தேர்தலில் அவர் கட்சி மொத்தமுள்ள 80 சீட்டுகளில் 21ஐ கைப்பற்றியிருந்தது. இம்முறை, 80க்கு 0 வாங்கியுள்ளது.
பலத்த அடி...
தலித் வாக்குகளை மலைபோல நம்பியிருந்த மாயவதியை அந்த வாக்குகள் கைவிட்டுவிட்டன. அவை பாஜகவுக்குதான் சென்றிருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் வாக்குகள் காங்கிரஸ், சமாஜ்வாதி, பாஜக ஆகிய கட்சிகளுக்கு பிரிந்து சென்றுள்ளன. இதனால் மாயவதிக்கு பலத்த அடி.
தேசிய மாநாட்டு கட்சி...
இன்னும் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீருக்கு போனால், ஆளும் கட்சியே அங்கு அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. அம்மாநிலத்தை ஆளுவது தேசிய மாநாட்டு கட்சி. அங்குள்ள 6 தொகுதிகளில், மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, இடங்களையும், 2 இடங்களில் பாஜகவும் சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றுள்ளனர்.
ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் அங்கு தோல்வியைத் தழுவி உள்ளார். காங்கிரஸை சேர்ந்த மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் உதம்பூரில் போட்டியிட்டு அவுட் ஆகியிருக்கிறார்.