5 மாதங்களில் அதிகரித்த 3 மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு
டெல்லி: மத்திய அமைச்சர்களில் 3 பேரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது.
இது குறித்து தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அமைச்சர்கள் 3 பேரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவின் சொத்துமதிப்பு தான் சட்டென்று அதிகரித்துள்ளது.
லோக்சபா தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்த அவர் தன்னிடம் ரூ.9.88 கோடி சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்தார். ஆனால் தற்போது அவருடைய சொத்துமதிப்பு ரூ.10.46 கோடி அதிகரித்து ரூ.20.35 கோடியாகவிட்டது.
கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.2.98 கோடியும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் சொத்து மதிப்பு ரூ.1.01 கோடியும் அதிகரித்துள்ளது.
மத்திய அமைச்சர்களில் பலர் கோடீஸ்வரர்கள். அதில் ரூ.114.03 கோடி சொத்துடன் அருண் ஜேட்லி தான் பணக்கார அமைச்சர் ஆவார். இந்நிலையில் 16 அமைச்சர்களின் சொத்துமதிப்பு குறைந்துள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சொத்துமதிப்பு ரூ.3.89 கோடி குறைந்துள்ளது. வடகிழக்கு தொகுதி மேம்பாட்டு துறை அமைச்சர் வி.கே. சிங்கின் சொத்து மதிப்பு ரூ.3.13 கோடி குறைந்துள்ளது. மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் சொத்துமதிப்பு ரூ.1.28 கோடி குறைந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.