2019லும் மத்தியில் மோடி அரசுதான்.. பரபரப்பு சர்வே ரிசல்ட்
Recommended Video
டெல்லி: ஆங்கில மீடியா குரூப்பான டைம்ஸ்ஆப் இந்தியா, 2019 லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆன்லைன் சர்வே நடத்தியது. இதில் நாட்டு மக்கள் மனநிலை குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 12 முதல் 15ம் தேதிவரை இந்த சர்வே, அதன் வெவ்வேறு மொழிகளில் உள்ள 10 வெப்சைட்டுகளின் வாயிலாக நடத்தப்பட்டது.
72 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், சுமார் 5 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
அதிக ஆதரவு
இந்த சர்வே பல ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் இப்போதைய மோடி அரசே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று 79 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் நடந்த கூத்துகள் ஆகியவற்றுக்கு நடுவேயும் மோடி அரசுக்கே அதிக மக்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
ராகுலுக்கு ஆதரவு இல்லை
காங்கிரஸ் வலிமையிழந்து இருப்பதே மக்களின் இந்த மனநிலைக்கு முக்கிய காரணணமாக தெரிகிறது. ஏனெனில், 73 சதவீதம் மக்கள், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் இருந்தாலும் கூட அக்கட்சிக்கு வாக்களிக்கப்போவதில்லை என கூறியுள்ளனர். கடந்த கால கசப்புகள், ராகுல் தலைமை மீதான நம்பிக்கையின்மை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம்.
வாரிசு அரசியல்
ஏனெனில் இந்த சர்வேயில் 20 சதவீதம் மக்கள் மட்டுமே ராகுல் காந்தி, மோடிக்கு சரிசமமான போட்டியாளர் என கூறியுள்ளனர். அதேநேரம், நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக இருந்தால் அக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று 38 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர். இதில் மற்றொரு சுவாரசியமாக 37 சதவீதம் பேர், நேரு குடும்பத்தை தாண்டி ஒருவர் காங்கிரசின் தலைவரானால் அக்கட்சிக்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
ஆங்கிலம், கன்னடம்
மொழிவாரியாக சர்வேயை பிரித்து பார்த்தால், ஆங்கில வாசகர்களில் 76 சதவீதம் பேர் மோடி அரசுக்கும், 20 சதவீதம் பேர் ராகுல் தலைமையிலான அரசு அமையவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கன்னட மொழியினர் 79 சதவீதத்தினர் மோடிக்கும், 10 சதவீதம் மட்டுமே ராகுலுக்கும் ஆதரவு அளித்துள்ளனர். பிறர் என்பதற்கு 11 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
ராகுல் காந்திக்கு தமிழகம் ஆதரவு
தெலுங்கு வாசகர்கள் 48 சதவீதம் பேர் மோடிக்கும், 46 சதவீதம் பேர் ராகுலுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழ் மற்றும் மலையாள வாசகர்கள் மட்டுமே ராகுல் காந்தி தலைமையில் அரசு அமைய வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். இத்தனைக்கும் தமிழக மக்கள் கடந்த கால காங்கிரஸ் ஆட்சி மீது பல்வேறு புகார்களை கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
தமிழ், மலையாளம்
தமிழக மக்களில் 30 சதவீதம் பேர் மோடிக்கும், 58 சதவீதம் பேர் ராகுலுக்கும் ஆதரவு அளித்துள்ளனர். மலையாளம் வாசகர்கள் 39 சதவீதம் பேர் மோடிக்கும், 55 சதவீதம் பேர் ராகுலுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரஸ் அளவுக்கு பாஜக வலிமையான கட்சி இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த கருத்து கணிப்பை வைத்து பார்த்தால் அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது.