பிரம்மோற்சவத்திற்கு தயாராகும் திருமலை ஏழுமலையான் கோவில்: ரூ.30 லட்சத்தில் மலர் அலங்காரம்
திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி 30 லட்சம் ரூபாய்க்கு மலர் அலங்காரம் செய்யப்பட உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் 13ம் தேதிவரை திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அக்டோபர் 4ம் தேதி மாலை அங்குராற்பணம் மற்றும் சேனாதிபதி விஸ்வசேனர் ஊர்வலம் நடைபெறுகிறது.
கிரண்குமார் ரெட்டி
அக்டோபர் 5ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அன்று மாலை முதல்வர் கிரண்குமார் ரெட்டி அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்குகிறார்.
கருட சேவை
5ம் நாளான 9ம் தேதி கருட சேவையும், 10ம் தேதி தங்க தேரோட்டமும், 12ம் தேதி மகா தேரோட்டமும், 13ம் தேதி சக்கரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவுபெறுகிறது.
4 லட்சம் லட்டுகள்
பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் வாகன சேவை குறித்த விளக்க புத்தகங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் 3 முதல் 4 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்படும். பிரம்மோற்சவத்திற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மலர் அலங்காரம்
பிரம்மோற்சவத்தை ஒட்டி மலர்களால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வண்ண வண்ண ஆர்கிட்ஸ், துலிப் மலர்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
பெங்களூர் மலர்கள்
பெங்களூரில்இருந்து பலவகையான மலர்கள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன. மலர் அலங்காரத்திற்காகவே 30 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கோசாலை
ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு முன்பு பசுக்களை வழிபட்டால் பக்தர்களுக்கு நல்லது என்று வேத பண்டிதர்கள் கருத்து கூறினார்கள். இதனை கருத்தில் கொண்ட தேவஸ்தானம் பசுக்களை வழிபடுவதற்கு பக்தர்களுக்கு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி வைகுண்டம் 1-வது கியூ காம்ளக்சில் 17-வது கம்பார்ட்மெண்ட் எதிரே புதிய கோசாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த கோசாலையில் நாட்டின் உயர்தர 7 பசுக்கள் நிறுத்தி வைக்கப்படும்.