சலவைக் கல்லில் மனைவிக்கு ஆலயம்.. மறைவைத் தாங்க முடியாமல் உருகி உருகி கட்டும் டிஎஸ்பி!
மனைவி மறைந்த பின்னர் அவரது பிரிவைத் தாங்க முடியாமல் மனைவி நினைவாக திருப்பதி டிஎஸ்பி கோயில் கட்டி வருகிறார்.
திருப்பதி: உயிருடன் இருந்த வரை தனக்காக வாழ்ந்த மனைவி மறைந்து போனதில் துயரம் தாங்காமல் அவரது நினைவாக உருகி உருகி கோயில் கட்டி வருகிறார் திருப்பதி டிஎஸ் முனி ராமையா.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்ட டிஎஸ்பியாக உள்ளார் முனி ராமையா. துணை ஆய்வாளராக பணியை தொடங்கிய அவர் டிஎஸ்பியாக தற்போது பணியாற்றி வருகிறார். இவர் ஸ்ரீவாணி என்ற மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு 3 குழந்தைகளும் உள்ளன.
கடந்த 2015ம் ஆண்டு ஸ்ரீவாணி திடீரென உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதனை முனிராமையாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியை இழந்து கடுமையான மனஉலைச்சலில் இருந்த அவர், அவரை மறக்க முடியாமல் அவருக்காக கோயில் கட்டத் தொடங்கியுள்ளார்.
என்ன சாப்டீங்க..
இதுபற்றி முனிராமையா, "நான் வேலைக்காக வெளியே சென்றிருந்தால் ஒவ்வொரு நொடியும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். சாப்பிடும் நேரம் வந்தால் போன் செய்து அக்கறையோடு என்ன சாப்டீங்க, எங்க சாப்டீங்க என கேட்பார். இரவு எவ்வளவு நேரம் தாமதமானாலும் எனக்காக காத்திருப்பார். இருவரும் ஒன்றாகவே சாப்பிடுவோம்" என்று உருக்கமாக தனது மனைவியைப் பற்றி நினைவு கூர்ந்தார்.
குவிந்த பரிசுகள்…
இதுவரை தான் 500க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளதாகவும், அனைத்தும் மனைவி ஸ்ரீவாணிதான் காரணம் என்றும் நினைவு கூறுகிறார் டிஎஸ்பி. மேலும், வாணிக்கு செம்பருத்தி பூ என்றால் கொள்ளைப் பிரியம் என்று உருகி கூறுகிறார்.
மனைவிக்கு சிலை
மனைவியை மறக்க முடியாத அவர், வீட்டிலேயே அவருக்கு சிலை வைத்தார். அன்றாடம் காலையில் எழுந்து மனைவியின் சிலையை அலங்கரிப்பார். சிலையை வழிபாடு செய்த பின்னர்தான் அலுவலகத்திற்கே புறப்படுவாராம்.
சலவைக் கல்லில்…
மனைவிக்காக கோயில் கட்டும் முனிராமையா எங்கிருந்து கல் கொண்டு வருகிறார் தெரியுமா? தனது மனைவி மும்தாஜிற்கு தாஜ்மகால் கட்டுவதற்காக முகலாய மன்னன் ஷாஜகான் சலவைக்கல் கொண்டு வந்தாரே அங்கிருந்துதான் இவரும் சலவைக்கல்லை தனது மனைவிக்கு கோயில் கட்ட வரவைழத்திருக்கிறார்.
கண்ணீர் அஞ்சலி..
சலவைக்கல் கோயில் பற்றி டிஎஸ்பி முனிராமையா, "ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா என்ற இடத்தில் தான் தாஜ்மகால் கட்டுவதற்கான கல் எடுக்கப்பட்டது. அங்குதான் என் மனைவியின் கோயிலை அமைக்க சலவைக் கற்களை வாங்கினேன். 10 நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு மாதிரி சிலை அமைத்து பெற்று வந்தேன். அவ்வப்போது அவரை பார்ப்பதற்காகவும், மன அமைதிக்காவும் இந்தக் கோயிலை கட்டி வருகிறேன்" டிஎஸ்பி முனிராமையா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.