கேரள மாநிலத்தில் பந்த்.. தமிழகத்தில் போக்குவரத்து பாதிப்பு!
தென்மலை: கேரள மாநிலத்தில் இன்று முழுபந்த் நடைபெறுவதால் மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வாகனப் போக்குவரத்தும் தடைபட்டு்ளது. தமிழக எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு அங்கு கட்டிடங்களை கட்டுவதற்கும் தடைவிதித்தும், கஸ்துரி ரங்கன் தலைமையில் ஆன கமிட்டி மத்திய அரசிடம் அறிக்கையொன்றை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையை அமல் படுத்த எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி,மலப்புரம், ஆலப்புழை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு இடது சாரிகள் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து காலை 7மணி முதலே தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் ஆங்கங்கே நிறுத்தப் பட்டன.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து குளித்துவிட்டு செங்கோட்டை புளியரை வழியாக ஆரியன்காவு ஐயப்பன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு சபரிமலை செல்வர். இன்று கேரளாவில் வேலை நிறுத்தம் பற்றி அறியாத அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்லமுடியாமல் ஆரியன்காவு, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு பெரும் வேதனையை அனுபவித்தனர்.
மேலும் காலையில் புளியரையில் இருந்து கேரளா நோக்கி வேகமாக சென்ற மினி லாரி ஒன்று 50அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் யாருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
அம் மாநிலஅரசு பேருந்தும், தமிழக அரசு பேருந்தும் இயங்காததால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், விமானநிலையத்திற்கு செல்லுபவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல குமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications