மரபை மீறிய பாலிவுட் இயக்குநரின் நாக்கை வெட்டினால் ரூ. 1 கோடி- மதுராவின் மகா பஞ்சாயத்து
டாய்லட்-ஏக் பிரேம் கதா படத்தின் இயக்குநரின் நாக்கை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று மதுராவில் நடந்த மகா பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரா: உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா, இந்துக்களின் புனித நகரமாக கருதப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம பூமியாகக் கருதப்படும் இந்நகருக்கும் மற்றொரு நகரான பிருந்தாவனுக்கும் இடையில் நந்தகாவ்ன், பர்ஸானா என்ற இரு கிராமங்கள் உள்ளன.
இவ்விரு கிராமங்களில் கடந்த சில நாட்களாக 'டாய்லட்-ஏக் பிரேம் கதா ' என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை ஆதரித்து இப்படம் எடுக்கப்படுகிறது.
இதன் நாயகனாக பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் நாயகன் நந்தகாவ்ன் கிராமத்தையும் நாயகி பர்ஸானா கிராமத்தையும் சேர்ந்தவர்களாக படத்தில் காட்டப்பட உள்ளது. இந்த படத்தின் கதை மரபை மீறி உள்ளதாக கூறி சாதுக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இது தொடர்பாக மதுராவை சுற்றியுள்ள 20 கிராம மக்களின் மஹா பஞ்சாயத்து சாதுக்கள் தலைமையில் கடந்த திங்கள் கிழமை இரவு நடைபெற்றது. அப்படத்தின் மீது கோபம் கொண்ட மஹா பஞ்சாயத்தினர், அதன் இயக்குநர் நாரயண் சிங்கின் நாக்கை வெட்டி வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
ஸ்ரீகிருஷ்ணர், நந்தகாவ்ன் கிராமத்தையும் அவருடன் லீலைகள் செய்த ராதை, பர்ஸானா கிராமத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதனால், இந்த கிராமத்தவர்களுக்கு இடையே அந்தக் காலம் முதல், திருமண உறவு கிடையாது. இந்த வழக்கத்தை முறிக்கும் வகையில் படத்தின் கதை உள்ளது என்று மதுராவின் தலைமை சாதுவாகக் கருதப்படும் பூல் தோல் மஹராஜ் கூறியுள்ளார்.
கதையையும் படத்தின் தலைப்பையும் மாற்றவில்லை எனில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க மாட்டோம். இந்த பிரிஜ் பிரதேசத்தின் பாரம்பரியத்தை எந்தவொரு படத்திலும் தவறாகச் சித்தரிப்பதை இப்பகுதிவாசிகள் ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் மகா சாது.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேறு இடத்தில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மஹா பஞ்சாயத்தில் அப் பகுதியில் வாழும் முஸ்லிம்களும் கலந்துகொண்டு மதுராவின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என சாதுக்களிடம் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.