அடித்துக் கொட்டும் மழை! ஆர்ப்பரித்து எழும் அலை! முடங்கியது மும்பை!
மும்பை : கடந்த 4 நாட்களாக கொட்டி வரும் மழையால் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வானிலை மையம் எச்சரித்தது போன்று நேற்று நள்ளிரவிலும் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்து அச்சுறுத்தின.
விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மெட்ரோ ரெயில் சேவையும் முடங்கியுள்ளது.
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருவதால், தாதர் மேற்கு சானே குருஜிமார்க் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், மகாலட்சுமி ஜங்ஷன், பூலாபாய் தேசாய் மார்க், கோபால் தேஷ்முக் ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
மேலும் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன.
புறநகர் பகுதியில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
கனமழை காரணமாக மும்பையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. மும்பை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பலத்த மழைக்கு இடையில் நள்ளிரவிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 4 மீட்டருக்கும் மேல் கடல் அலை எழும் என ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி கடலில் உள்ள ஹாஜி அலி தர்காவை மறைக்கும் வகையில் கடல் அலைகள் எழும்பின.
அதிக கடல் சீற்றம் காரணமாக பாந்த்ரா-ஒர்லி கடல் வழி மேம்பாலம் மூடப்பட்டது. அங்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் மீட்பு குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட கடற்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
பேரலைகள் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், ராணுவம் மற்றும் கடற்படை தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications