காற்றிலிருந்து சங்கிலியை "வரவழைத்த" சாமியார்.. அதை கும்பிட்டு வாங்கிய மகா. முதல்வரின் மனைவி!
மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு சாமியார் காற்றிலிருந்து சங்கிலி ஒன்றை வரவழைத்தார். பின்னர் அதை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதாவிடம் கொடுத்தார். அவரும் சாமியாரைக் கும்பிட்டு அதைப் பெற்றுக் கொண்டார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
முதல்வரின் மனைவி அம்ருதா, இந்த செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. அவர் அந்த சங்கிலியைப் பெற்றிருக்கக் கூடாது. அது மூட நம்பிக்கை செயல். அதை முதல்வரின் மனைவி ஆதரித்திருக்கக் கூடாது என்று மகாராஷ்டிர மூட நம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தலைவர் அவினாஷ் பாட்டில் கூறியுள்ளார்.

முதல்வர் பட்னாவிஸ் தனது மனைவியிடம் விளக்கம் கேட்க வேண்டும். தேவைப்பட்டால் அவரிடம் மன்னிப்பு கேட்குமாறு கூற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் நாங்கள் சொல்லும் இடத்தில் வந்து இப்படி சங்கிலியை வரவழைத்துக் காட்டட்டும் அந்த சாமியார். அவருக்கு நாங்கள் ரூ. 21 லட்சம் பரிசளிக்கத் தயார் என்றும் சவால் விட்டார்.
ஆனால் தான் மூடநம்பிக்கை, மாயம், மந்திரம் ஆகியற்றில் ஒருபோதும் நம்பிக்கை கொண்டவள் இல்லை என்று அம்ருதா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. சாமியார் குருவானந்த சாமியார் மிகவும் வயதானவர். அந்த வயதுக்கு நான் மதிப்பு கொடுத்து வணங்கினேன். அவர் எனக்கு சங்கிலி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதை நான் பெற்றுக் கொண்டேன். அவ்வளவுதான்.
வயதில் மூத்தவர்களை வணங்க வேண்டும், மரியாதை தர வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து நான் வளர்க்கப்பட்டேன். அந்த அறிவுரைப்படிதான் நான் தொடர்ந்து நடந்து வருகிறேன். இனியும் நடப்பேன் என்று கூறி விட்டார்.
மகாராஷ்டிராவில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி வந்த நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து மாநில பாஜக அரசு மூட நம்பிக்கைக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. இந்த நிலையில் அப்படி சட்டம் கொண்டு வந்த அரசின் முதல்வரின் மனைவியே மூட நம்பிக்கையான செயலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல நடந்த கொண்டது சரியா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இருப்பினும் இதை தேவையில்லாமல் பெரிதாக்குகிறார்கள் என்று கூறுகிறார் பட்னாவிஸின் மனைவி அம்ருதா. அவர் மேலும் கூறுகையில், குருஜி என்னை அழைத்து பாசத்துடன் பேசினார். நானும் பதிலுக்கு வணக்கம் கூறிப் பேசினேன். அப்போது அவரது கையில் சங்கிலி இருந்தது. அதைத்தான் என்னிடம் கொடுத்தார்.
அதில் என்ன மாயம் உள்ளது, மந்திரம் உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே அவரது கையில் சங்கிலி இருந்தது. அதைத்தான் என்னிடம் கொடுத்தார். நான் ஒருபோதும் மூட நம்பிக்கையை ஆதரிப்பது கிடையாது. இப்போதும் அப்படித்தான் உள்ளேன் என்று கூறியுள்ளார் அம்ருதா.












Click it and Unblock the Notifications