துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்கு: அமித்ஷாவுக்கு கோர்ட் 'குட்டு'
மும்பை: துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்கில் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரமான அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகமல் இழுத்தடித்து வருவதற்கு நீதிபதி "குட்டு" வைத்துள்ளார்.
2005ம் ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த சொராபுதீன், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் எனக் கூறி அம்மாநில போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த சொராபுதீன் படுகொலையை பார்த்த ஒரே சாட்சிதான் துளசிராம். இவரையும் 2006ம் ஆண்டில் போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். பின்னர் இந்த இரு சம்பவங்களும் போலி என்கவுன்ட்டர் என விஸ்வரூபமெடுக்க சிபிஐ வசம் வழக்கு போனது.
சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மோடியின் வலதுகரமான அமைச்சர் அமித் ஷாவை 2010ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி கைது செய்தது. 3 மாதம் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே துளசிராம் போலி என்கவுன்ட்டர் வழக்கு குறித்து விசாரணை நடத்திய சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் அமித் ஷா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேரின் பெயர்கள் இடம்பெற்றன.
மும்பை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் வழக்கு விசாரணையின் போது அமித்ஷா ஆஜராகாமல் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து விலக்கு கோரி வருகிறார்.
இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அமித் ஷா ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி ஒவ்வொரு முறையும் இப்படியே ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி ஆஜராகாமல் இருக்கிறீர்களே என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஜூலை 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications