3 சகோதரிகளில் நாடு திரும்பிய இரட்டையர்.. வர மறுத்த ஒருவர்... கடனை அடைக்க தங்குவதாக உருக்கம்!
கொச்சி/கோட்டயம்: கேரளாவைச் சேர்ந்த மூன்று சகோதரிகளில் இரட்டையரான இருவர் மட்டும் நாடு திரும்பி விட்ட நிலையில் அவர்களின் 3வது சகோதரி மட்டும் தொடர்ந்து ஈராக்கிலேயே தங்கியுள்ளார். தனது ஒப்பந்தம் முடிய இன்னும் 2 மாதங்களே உள்ளதால் அதை முடித்தால் மட்டுமே தனக்கு முழு ஊதியம் கிடைக்கும், அதை வைத்து ஊரில் கடனை அடைக்கலாம் என்பதால் அவர் மட்டும் வர மறுத்து விட்டார்.
இதனால் அந்த நர்ஸின் குடும்பத்தினர், இருவர் வந்ததால் மகிழ்ச்சியாகவும், இன்னும் ஒருவர் வராமல் ஈராக்கிலேயே தங்கியுள்ளதால் கவலையிலும் உள்ளனர்.
ஆனால் அந்த மூன்றாவது சகோதரி வேலை பார்க்கும் ஊரில் தீவிரவாதிகள் பிரச்சினை இல்லை என்றும் சண்டை நடக்கவில்லை என்றும் அமைதி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
நாடு திரும்பிய நர்ஸ்கள்
ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த இந்த நர்ஸ்கள் 46 பேரும் நேற்று இந்தியா திரும்பினர்.
இரட்டையர் நர்ஸ்கள்
இவர்களில் சோனாவும், வீணாவும் இருவர். இவர்கள் இருவரும் சகோதரிகள், இரட்டையர். இவர்கள் திக்ரித் மற்றும் பாக்தாத் நகரில் நர்ஸ்களாகப் பணியாற்றி வந்தனர்.
வர மறுத்த டோனா
இவர்களின் இன்னொரு சகோதரி டோனா. இவர் அல் சமாவா என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நாடு திரும்ப மறுத்து விட்டார்.
ஒப்பந்தம் முடிந்ததும்
இவருக்கு பணி ஒப்பந்தம் முடிய இன்னும் 2 மாதங்களே உள்ளன. அதை முடித்தால்தான் முழுமையான ஊதிய பலன் கிடைக்கும், பெரும் சம்பளமும் கிடைக்கும். பாதியில் போனால் கிடைக்காது. எனவே 2 மாதங்களில் பணியை முடித்து விட்டு பணத்துடன் ஊர் திரும்புகிறேன். அப்போதுதான் ஊரில் பட்ட கடனை அடைக்க முடியும். நீங்கள் மட்டும் போய் வாருங்கள் என்று தனது இரு சகோதரிகளையும் சமாதானப்படுத்தி அவர்களை மட்டும் அனுப்பி வைத்து விட்டு தான் மட்டும் தொடர்ந்து தங்கியுள்ளார்.
தந்தையின் கவலை
இதுகுறித்து டோனாவின் தந்தை ஜோசப் கூறுகையில், இன்னும் 2 மாதங்களே பணி முடியவுள்ளதால் எனது 3வது மகள் வர மறுத்து விட்டாள். இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவளையும் திரும்பச் செய்ய நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றார்.
தூங்க முடியாமல் தவித்தோம்
தங்களது ஈராக் அனுபவம் குறித்து வீணா கூறுகையில், எப்போது பார்த்தாலும் குண்டுச் சத்தமாகவே இருந்தது. நாங்கள் தூங்காமல் தவித்து வந்தோம். மரண பீதியில் இருந்து வந்தோம் என்றார்.
டோனாவின் ஆறுதல்
சோனா கூறுகையில், எங்களது சகோதரி டோனாதான் எங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தாள். எங்களுடன் தொடர்ந்து பேசியபடி இருந்தாள். நம்பிக்கை கொடுத்தாள். ஆறுதலாகப் பேசினாள். அதுதான் எங்களது உயிரைப் பிடித்து வைத்திருந்தது. தற்போது நாங்கள் வந்து விட்டோம். ஆனால் டோனா வராமல் இருப்பது எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார்.
ஒன்றரை வருடமாக பணி
டோனா பொது நர்சிங்கில் பட்டம் வாங்கியவர். அவருக்கு வேறு எங்குமே வேலை கிடைக்கவில்லை. ஈராக்கில்தான் கிடைத்தது. எனவேதான் இங்கு வந்து சேர்ந்தார். அவர் படிப்புக்கு வேறு நாடுகளில் வேலை கிடைக்காதாம். கடந்த ஒன்றரை வருடமாக அவர் ஈராக்கில் இருந்து வருகிறார். தற்போது இந்த வேலையை விட்டுப் போய் விட்டால் மறுபடியும் வெளிநாட்டு வேலை கிடைக்காது என்பதால்தான் தொடர்ந்து தங்கியிருக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.