பெங்களூரு வன்முறை.. கட்டுப்படுத்த முடியாமல் திணறிய 2 டிசிக்கள் தூக்கியடிப்பு #bengaluru
பெங்களூரு: பெங்களூரு நகரில் கலவரம் மிகப் பெரிய அளவில் தலைவிரித்தாடிய பகுதிகளை தங்களது வசம் வைத்திருந்த இரண்டு துணை கமிஷனர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு துணை கமிஷனர் டி.ஆர். சுரேஷ் மற்றும் மேற்கு துணை கமிஷனர் அஜய் ஹிலோரி ஆகியோர்தான் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் வடக்கில் லபு ராம் மற்றும் மேற்கில் அனுசேத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லபு ராம் ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்பியாக இருந்து வந்தார். அனுசேத், சித்ரதுர்கா மாவட்ட எஸ்பியாக இருந்தவர். சமீபத்தில் போலீஸ் கமிஷனர் என்.எஸ். மேகரிக்குடன் முதல்வர் சித்தராமையா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த இரு அதிகாரிகளின் செயல்பாடு, மெத்தனம், திறமையின்மை குறித்து சித்தராமையா கடும் ஆட்சேபனையும், அதிருப்தியும் வெளியிட்டிருந்தாராம். இந்த நிலையில்தான் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நகரில் நடந்த வன்முறை மற்றும் கலவரத்தில் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்குதான் கலவரம் மிகப் பெரிய அளவில் இருந்தது. இங்கு போலீஸார் திறம்பட செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பெருமளவில் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மிகப் பெரிய வன்முறை வெறியாட்டத்தை இப்பகுதிகள் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு பெங்களூரு பகுதியில் வரும் ஹெக்கனஹள்ளியில்தான் போலீஸ் வாகனத்தையே கும்பல் ஒன்று தாக்கி எரிக்க முயன்றது. அப்போதுதான் போலீஸார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். அதில் ஒருவர் குண்டுக் காயம் பட்டும், இன்னொருவர் மாடியிலிருந்து விழுந்தும் உயிரிழந்தனர்.