ஆப்பிள் அப்ளிகேஷன்கள்: 12, 14 வயதில் சிஇஓ ஆன சென்னை 'குட்டி' சகோதரர்கள்
பெங்களூர்: சென்னையைச் சேர்ந்த 14 மற்றும் 12 வயது சகோதரர்கள் உருவாக்கிய அப்ளிகேஷன்கள் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
சென்னையைச் சேர்ந்தவர் ஷ்ராவன் குமரன்(14). அவரது தம்பி சஞ்சய் குமரன்(12). அப்ளிகேஷன்களை உருவாக்கித் தரும் கோ டைமன்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஷ்ராவன். அதே நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய். அவர்கள் இந்த நிறுவனத்தை தங்கள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினர்.
இந்தியாவின் இளம் தொழில் அதிபர்களாக இந்த சகோதரர்கள் உள்ளனர். சென்னையில் உள்ள வேல்ஸ் பில்லபாங் சர்வதேச பள்ளியில் ஷ்ராவன் 9ம் வகுப்பிலும், சஞ்சய் 7ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். இந்த சகோதரர்களின் தந்தை குமரன் சுரேந்தர் சைமன்டெக் நிறுவனத்தின் ஆன்ட்டி வைரஸ் மற்றும் செக்யூரிட்டி சொலுஷன்ஸ் டைரக்டர். தாய் ஜோதி லக்ஷ்மி முன்னாள் பத்திரிக்கையாளர்.
புரோகிராமிங் கற்றுக் கொள்ள, கேட்ஜெட்டுகளுடன் விளையாட தங்களை ஊக்கப்பட்டுத்தியதே தங்கள் தந்தை தான் என்கின்றனர் இந்த சுட்டிப் பையன்கள்.
SAP நிகழ்ச்சியில்
சகோதரர்கள் இருவரும் பெங்களூரில் நடந்த SAP நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் அறிவான பேச்சு மற்றும் தன்னம்பிக்கையால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
கேட்ச் மீ காப்
ஷ்ராவனும், சஞ்சயும் சேர்ந்து கேட்ச் மீ காப் என்று திருடன், போலீஸ் விளையாட்டு அப்ளிகேஷனை கடந்த ஆண்டு வெளியிட்டனர். அவர்களின் இந்த முதல் அப்ளிகேஷனே சூப்பர் ஹிட்.
அப்துல் கலாம்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது கேட்ச் மீ காப் விளையாட்டை விளையாட தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று அவர் கூறினார் என சஞ்சய் பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
2 ஆண்டுகளில் 11
சகோதரர்கள் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 11 அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளனர். அண்மையில் அவர்கள் எக்ஸ்ட்ரீம் இம்பாசிபிள் 5 அல்லது இஐ5 என்ற ஆக்ஷன் விளையாட்டு அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளனர்.
ஆப்பிள் ஸ்டோரில்
ஷ்ராவன், சஞ்சய் உருவாக்கிய கேட்ச் மீ காப் அப்ளிகேஷன் சமர்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் ஆப்பிள் ஸ்டோர்களில் வெளியிடப்பட்டது. ஆப்பிள் ஸ்டோரில் அவர்களின் ஆல்ஃபபெட் போர்ட் அப்ளிகேஷனுக்கு 5ம் இடம் கிடைத்தது. அவர்களின் அப்ளிகேஷன்கள் ஆப்பிள் ஸ்டோர்கள் தவிர்த்து கூகுளின் ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும் கிடைக்கிறது.
டோணி பிடிக்கும்
அடி பிரித்து எடுப்பதால் கிரிக்கெட் விளையாட்டில் கேப்டன் டோணியை மிகவும் பிடிக்கும் என்கிறார்கள் ஷ்ராவன் மற்றும் சஞ்சய்.