2 பேர் மட்டும் வாழும் கிராமம்... 5 நிமிடத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு
இடாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் இரண்டு பேர் மட்டுமே வாழும் கிராமம் ஒன்றில் நூறு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாகப்பட்டது கிராமத்தில் வாழ்ந்து வரும் ரெண்டு பேரும் ஓட்டுப் போட்டுட்டாங்களாம்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும், 45 சட்டசபைத் தொகுதிகளுகும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, அந்த மாநிலத்தின் மிகச்சிறிய வாக்குச்சாவடி ஒன்றில் வெறும் இரண்டு வாக்காளர்களுக்காக மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு வாக்காளர்களுக்காக மட்டும் அமைக்கப் பட்ட அந்த வாக்குச்சாவடியில் ஊழியர்கள் மட்டும் இருபதுக்கும் அதிகமானோர் இருந்துள்ளனர்.

குறைந்த மக்கள்தொகை...
சீன எல்லையை ஒட்டியுள்ள அன்ஜா மாவட்டத்தில் மலோகயான் கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சுமார் ஏழு குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆனால், தங்களுக்கு சாலை வசதிகள் சரிவரச் செய்து தரப்படவில்லை எனக் கூறி அவர்களும் நகரத்திற்கு குடி பெயர்ந்து விட்டனர்.

அக்கம்பக்கம் யாருமில்லா கிராமம்...
மற்றவர்கள் எல்லாம் வெளியேறிய போதும் ஜோகெலும் தாயெங் மற்றும் அவரது மனைவி சோகேலா என இருவரும் தொடர்ந்து அந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். அவர்கள் இருவருக்காக மட்டும் அந்த கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்கப் பட்டது.

கால்நடையாகச் சென்ற அதிகாரிகள்...
இதற்காக திடிங் எனும் கிராமத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள மலோகயானுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உட்பட போலீசார் 10 பேரும், சுமையாளார்கல் 10 பேரும் வாக்குப்பதிவு எந்திரங்களோடு அங்கு நடந்தே சென்றுள்ளனர்.

காடு, மலைகளைத் தாண்டி...
கரடு முரடான மலைப்பாதைகளையும், பல சிறிய நீரோடைகளையும் அடர்ந்த காடுகளையும் கடக்க அவர்களுக்கு சுமார் 4 மணி நேரம் ஆனதாம்.

100 சதவீதம் வாக்குப் பதிவு...
நேற்று வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே கணவன், மனைவி இருவரும் வந்து தங்கள் கடமையை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து அந்த வாக்குச் சாவடியில் 100 சதவீதம் வாக்குப்பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications