இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசர் ஷேக் முகமதுவுக்கு பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு !
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் (54), மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு மாலை 6 மணியளவில் இளவரசர் வந்தடைந்தார். டெல்லி வந்த ஷேக் முகமதை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கட்டித் தழுவி வரவேற்றார். ஷேக் முகமது உடன் அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் இந்தியா வந்துள்ளனர்.
இந்த பயணத்தின் முதல் நிகழ்வாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட தலைவர்களுடனும் இளவரசர் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
மேலும் நாளை பிரதமர் உடனான இளவரசரின் சந்திப்பின் போது, விண்வெளி, எரி சக்தி, ரயில்வே, ஐ.டி. மின்னணுவியல்.உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடம் பிடிக்கும் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.