'நாங்களும் நடத்துவோம்..' குஜராத்தில் ஒலிம்பிக் குறித்து அப்டேட் சொன்ன மத்திய அமைச்சர்!இதுதான் காரணமா?
காந்திநகர்: குஜராத்தில் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தயார் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்திருக்கிறார்.
மாநிலத்தில் இன்னும் இரு தினங்களில் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
மேலும், ஒலிம்பிக் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளையும் நடத்த தயார் என்று அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்
குஜராத்தில் டிசம்பர் 1ம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்குகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பாஜக தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனுராக் தாகூர் இவ்வாறு கூறியுள்ளார். அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நாடுகள் 2025ம் ஆண்டுக்குள் இறுதி செய்யப்படும். இவ்வாறு இருக்கையில், குஜராத்தில் இப்போட்டிகளை நடத்த தயாரா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், இப்போட்டிகளை நடத்துவதற்கான சரியான இடம் குஜராத்தாகதான் இருக்கும் என்றும், இங்குதான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கேள்வி
அதேபோல குஜராத்தில் விரைவில் நாரன்புரா விளையாட்டு வளாகம் வரவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நோக்கத்துடன் குஜராத் ஒலிம்பிக் மிஷன் மூலம் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை பாஜக அரசு உருவாக்கும் என்று அதில் உறுதியளித்திருந்தது. இதனையடுத்து நேற்று செய்தியாளர்கள் மேற்குறிப்பிட்ட கேள்வியை எழுப்பியிருந்தனர். ஆனால் இது தேர்தலுக்காக கொடுக்கப்படும் வெற்று கவர்ச்சி வாக்குறுதிகள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

தேர்தல் அறிக்கை
மாநிலத்தில் தனது 27 ஆண்டுக்கால ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. இந்நிலையில் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது. குறிப்பாக, மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவு உயர்த்துவது, அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, அரசு துறைகளில் ஒரு லட்சம் பெண்களுக்கு வேலை, வேளாண் உள்கட்டமைப்புக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு, கோசோலை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.500 கோடி, கால்நடைகள் சிகிச்சைக்காக 1,000 நடமாடும் கால்நடை மருத்துவக் குழுக்கள் என பல்வேறு முக்கிய திட்டங்களை பாஜக அறிவித்திருக்கிறது.

இலவசம்
மறுபுறம் பல இலவசங்களையும் அறிவித்திருக்கிறது. அதாவது, கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர், 9-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள், குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர், பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவசமாக மாதம் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஆண்டுக்கு 4 லிட்டர் சமையல் எண்ணெய் என இலவசங்கள் குறித்த அறிவிப்பை கட்சி அள்ளித் தெளித்திருக்கிறது. முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இலவசங்களால்தான் நாட்டின் பொருளாதாரம் சீரழிகிறது என்று கூறியிருந்தார். பிரதமர் இவ்வாறு கூறிய நிலையில் பாஜக பல இலவச திட்டங்களை அறிவித்திருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தேர்தல்
கடந்த 27 ஆண்டுகளாக பாஜக குஜராத்தில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால் கடைசியாக 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சியின் வாக்கு வங்கி கணிசமான அளவில் சரிந்துள்ளது. இதனை இந்த தேர்தலில் சரிசெய்ய கட்சி தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்காக பிரதமர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச முதலமைச்சர்கள், முக்கிய அமைச்சர்கள் என பலரை களத்தில் இறக்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டம் டிசம்பர் 1ம் தேதியும் இரண்டாம் கட்டம் டிசம்பர் 5ம் தேதியும் நடைபெறுகிறது. 182 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications