வடமாநிலங்களில் வெளுத்துவாங்கும் மழை: டெல்லியில் வெள்ளம், டிராபிக் ஜாம்
டெல்லி: டெல்லியில் நேற்று பெய்த எதிர்பாரத மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு விரோதமான ஒரு வலுவிழந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதால் ஜம்மு காஷ்மீர் முதல் தமிழகத்தின் கடலோரப் பகுதி வரை பரவலாக மழை பெய்து வருகிறது. வட இந்தியாவில் இது பெரு மழையாகவும், தமிழக கடலரோப் பகுதிகளில் லேசான மழையையும் கொண்டு வந்துள்ளது.
இந்த அரிய வகை காற்றழுத்தம் காரணமாக இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில் வங்கக் கடலில் காற்றழுத்தங்கள் உருவாவது என்பது அரிதானது என்பதால் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது பலவீனமாக இருப்பதாகவும், இதன் காரணமாக நாட்டின் கடலரோப் பகுதிகள் மட்டுமல்லாமல் இமயமலை, மத்திய இந்தியா, வடக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் மழை கிடைத்துள்ளது.
வடமாநிலங்களில் மழை
உ.பியின் கான்பூர், ஜம்மு காஷ்மீரின் காத்ரா, குஜராத்தின் பவநகர், டெல்லி, மத்தியப் பிரதேசத்தின் பச்மார்ஹி, அகமதாபாத், லக்னோ, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் மழை பெய்துள்ளது.
டெல்லியில் வெளுத்த மழை
தலைநகர் டெல்லியில் ஞாயிறு மாலை 5.30 மணிவரை 17.2 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. குர்கான், காசியாபாத் பகுதிகளில் 11 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. டெல்லியில் குறைந்த பட்ச வெப்பநிலை 15.2 டிகிரியாகவும், அதிகபட்சம் 19 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
மழை வெள்ளத்தினால் டெல்லியில் போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருவதால் விரைவாக வீட்டிலிருந்து கிளப்ப வேண்டும் எனவும் போக்குவரத்தை விரைந்து சரி செய்யுங்கள் எனவும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவுறித்தியுள்ளார்.
ஜம்முவில் பனிப் பொழிவு
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பனிமழை பெய்து வருகிறது. தெற்கு காஷ்மீர் பகுதியில் 14.4 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
சாலை மூடல்
கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தெற்கு தீபகற்ப பகுதிகளிலும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பனிமழை
ஹிமாச்சல்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் பலபகுதிகளில் கடுமையான பனி கொட்டி வருகிறது.
மழைக்கு காரணம்
மத்திய அரபிக் கடலிலிருந்து விரைந்து வீசும் காற்றும் கூட சேர்ந்துள்ளதால் வங்கக் கடல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாட்டின் அனேக இடங்களில் மழை பெய்யக் காரணமாக அமைந்துள்ளது.
குளிர் நிலவும்
வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை குறைந்து காணப்படும் என்றும் ஹோலி பண்டிகைக்கு முன்பு வரை குளிர் நிலை நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது