1992க்கு பிறகு முதல் முறையாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கை வைக்கிறது உ.பி அரசு
லக்னோ: அயோத்தியில் ராமர் ஜென்ம பூமி-பாபர் மசூதி இடம் அமைந்துள்ள பகுதியை மேம்படுத்த முதல்முறையாக முயற்சியை துவக்கியுள்ளது அம்மாநில சமாஜ்வாதி அரசு.
சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் எந்த ஒரு மேம்பாட்டு பணியும் கடந்த பல ஆண்டுகளாக செய்யப்படவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பழைய கட்டியங்களை புதுப்பிக்கவும், புதிய கட்டிடங்கள் கட்டவும், இரு உத்தரவுகளை அம்மாநில அரசு கடந்த 8ம் தேதி வெளியிட்ட தகவல் தற்போது கசிந்துள்ளது.
அதேநேரம், சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவை இந்த பணிகள் எந்த வகையிலும் பாதிக்காது என்று அம்மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க உ.பி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மராமத்து பணிகளை தவிர்தத்து, 3 சத்தமில்லா ஜெனரேட்டர்களை நிறுவவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மின்சாரம் தடைபட்டாலும் விளக்கு வெளிச்சம் தடைபடாமல் இருக்க இந்த ஏற்பாடு.
1992ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு பிறகு, 2.75 கி.மீ சுற்றளவில் எந்த ஒரு மாறுபாடும் செய்யாமல் வைத்திருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் இருந்து இதுவரை எந்த ஒரு அரசும், சர்ச்சைக்குறிய பகுதியை தொட்டுப்பார்க்க விரும்பவில்லை. ஆளும் சமாஜ்வாதி கட்சிதான், முதல்முறையாக மராமத்து பணிகளில் இறங்கியுள்ளது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்துமா, அல்லது வரவேற்பை பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.