கிராமத்தில் செல்போன் பயன்படுத்தியதற்காக தாக்குதல்: அவமானத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் செல்போன் பயன்படுத்தியதற்காக கிராம மக்கள் தாக்கியதால் அவமானமடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அருயய்யா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் சம்வத்தன்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை அதே கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர் உள்பட 4 பேர் பார்த்துள்ளனர்.
செல்போன் மூலம் தவறான நடத்தையில் ஈடுபட்டால் அதற்குத் தக்கப் பாடம் கற்பிப்போம் எனக் மிரட்டியபடியே அப்பெண்ணை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பலர் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவத்தால் பலத்த அவமானமடைந்த அப்பெண், தீக்குளித்தார். அக்கம்பக்கத்தாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
‘தனது மகளின் சாவுக்கு அவளை மிரட்டி கொடுமைப்படுத்திய 4 பேர் தான் காரணம்' என்று அந்த பெண்ணின் தந்தை இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே அப்பெண்ணைத் தாக்கிய முகேஷ் உட்பட நான்கு பேரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அகிலேஷ் சருஷ்யா உறுதியளித்துள்ளார்.