உத்தராகண்டில் கடும் பனிச்சரிவு மற்றும் வெள்ளம்: சுமார் 150 பேர் மாயம்
உத்தராகண்ட் மாநிலத்தில் சமொலி மாவட்டத்தின் ராய்னி கிராமத்தில் தபோவன் பகுதியில் இன்று (பிப்ரவரி 7, ஞாயிற்றுக்கிழமை) சில மணி நேரங்களுக்கு முன் ஒரு பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது.
இதனால் தெளலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதோடு தபோவன் பகுதியில் இருக்கும் ரிஷிகங்கா மின்சாரத் திட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார திட்டத்தில் வேலை செய்து வந்த 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காணவில்லை என பி.டி.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
தெளலிகங்கா நதிக்கரையில் வாழும் கிராம மக்களை விரைவில் அப்புறப்படுத்துமாறு சமொலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாநில மீட்புப் படையினர் மற்றும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இந்த பனிச்சரிவால் தெளலிகங்கா நதியின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால், அதன் கரையோரத்தில் இருந்த சில வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு அலக்நந்தா நதிக்கரை ஓரத்தில் வசிப்பவர்களையும், விரைவாக பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு உத்தராகண்ட் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
https://twitter.com/ANI/status/1358305251879604227
"அலக்நந்தா நதிக்கரையில் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிரதி நதியில் இருந்து வரும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. அலக்நந்தா நிரம்பி வழியாமல் இருக்க, ஸ்ரீநகர் அணை, ரிஷிகேஷ் அணை ஆகியவை காலி செய்யப்பட்டுள்ளன" என்று உத்தராகண்டின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/ANI/status/1358298567287267329
"பனிச்சரிவின் காரணமாக ரிஷிகங்கா மின்சாரத் திட்டம் பெரிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. சம்பவ இடத்தில் சிலரை காணவில்லை என்று கூறப்பட்டாலும், எத்தனை பேரை காணவில்லை என இந்த நேரத்தில் குறிப்பிட முடியாது. தெளலிகங்கா மற்றும் அலக்நந்தா நதிகளில் திடீரென நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது" என்று சமோலி மாவட்டத்தின் கூடுதல் குற்றவியல் நடுவர் அனில் சயின்யால் பிபிசி மராத்தி சேவையிடம் கூறியுள்ளார்.
"தபோவன் முதல் ஹரித்வார் வரையிலான பல்வேறு இடங்களில் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நதிக்கரைகளில் வாழ்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். ராணுவம் உள்ளிட்ட படையினர் உதவிக்கு வந்திருக்கிறார்கள். தேசிய மற்றும் மாநில பேரழிவு நிவாரணப் படையினர் களத்தில் இருக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு
- ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தவிக்கும் கிராமம் - காரணம் என்ன?
- 'செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றுவது உளவுத் துறைக்கு முன்பே தெரியாதா?' - சிசிஜி
- காவல்துறையில் பணியாற்றிக் கொண்டே துப்பாக்கிச் சுடுதலில் சாதனை படைக்கும் வீராங்கனையின் கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: