தலித் மணமகன் குதிரை ஊர்வலம் செல்ல எதிர்ப்பு! எரித்து கொல்வதாக மிரட்டிய பெண்கள்! உத்தரகாண்டில் ஷாக்
அல்மோரா: உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த மணமகன் குதிரையில் திருமண ஊர்வலம் செல்ல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து எரித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 5 பெண்கள் உள்பட 6 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தை சேர்ந்தவர் தர்ஷன் லால். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவரது மகன் விக்ரம் குமார் (வயது 27). இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.
இந்த வயசுலயா? 8ஆம் வகுப்பிலேயே 5 மாத கர்ப்பம்! பெற்றோர் முன் சிறுமி செய்த செயல்! மிரண்டு போன மதுரை.!
இந்நிலையில் விக்ரம் குமாருக்கு பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணத்தையொட்டி தடியால் கிராமத்தில் விக்ரம் குமார் நேற்று குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
குதிரையில் இருந்து இறங்க மிரட்டல்
அப்போது சில பெண்கள் ஊர்வலத்தை வழிமறித்தனர். அவர்கள், விக்ரம் குமாரை குதிரையில் இருந்து இறங்க கட்டாயப்படுத்தினர். இதற்கு அவர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் குதிரையில் இருந்து இறங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்தவர்கள் ‛குதிரையில் இருந்து இறங்காவிட்டால் எரித்து கொலை செய்துவிடுவோம்' என மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசில் புகார்
இதுகுறித்து மணமகன் விக்ரன் குமாரின் தந்தை தர்ஷன் லால் போலீசில் புகார் அளித்தனார். புகாரில், ‛‛என் மகன் திருமணத்துக்காக குதிரையில் அழைத்து செல்லப்பட்டார். இதற்கு கிராம மக்கள் வழிமறித்து மிரட்டல் விடுத்தனர். பட்டியலினத்தவர் என்பதால் குதிரையில் ஊர்வலம் செல்லக்கூாடது எனக்கூறி எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர்'' என கூறியுள்ளார்.
பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்சி-எஸ்சி கமிஷன் விசாரணை நடத்தியது. இதையடுத்து 5 பெண்கள் உள்பட 6 பேர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் 506 (மிரட்டல்), 504 (வேண்டுமென்று அவமதித்தல்) மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அமைதி பேச்சுவார்த்தை
இதுபற்றி துணை கலெக்டர் கவுரவ் சாத்வால் கூறுகையில், ‛‛கிராமத்தில் அமைதி நிலவ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது'' என்றார். சப் இன்ஸ்பெக்டர் கோவிந்த் மேத்தா கூறுகையில், ‛‛சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க கூறினால் நிச்சயம் அதற்கு ஏற்பாடு செய்து கொடுப்போம்'' என்றார்.
இனி தொடரக்கூடாது
இதுபற்றி மணமகன் விக்ரம் குமார் கூறுகையில், ‛‛சில மாதங்களுக்கு முன் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குதிரையில் இருந்து இறங்க வைக்கப்பட்டார். நான் ஒரு முன்னுதாரணத்தை அமைக்க விரும்பியதால் நான் குதிரையிலிருந்து இறங்க மாட்டேன் என்று கோரினேன். எனக்குப் பிறகு யாருக்கும் இத்தகைய அவமதிப்பு நடக்ககூடாது'' என்றார்.
இதற்கு முன்பு நடந்தது என்ன?
அல்மோரா மாவட்டத்தில் பட்டியலினத்தவர்கள் மிரட்டப்படுவது இது முதல் முறையல்ல. 1980 மே 9 ம் தேதி கபல்டா பகுதியில் தலித் மணமகன் குதிரையில் ஊர்வலம் சென்றதை எதிர்த்தவர்கள் 14 பேரை கொன்றனர். இதில் 5 பேர் உயிருடன் எரித்து கொலை செய்பயப்ட்டனர். இதனால் தற்போது அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.