சசிகலாவைப் போலவே முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும் சலுகைகள்: ரூபா அறிக்கையில் பகீர்
பெங்களூரு சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதைப்போலவே போலி முத்திரைத்தாள் மோசடிமன்னன் தெல்கிக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று டிஐஜி ரூபா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டத்தைப் போலவே, போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும் பல்வேறு சலுகைகள் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது இப்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்து டிஐஜி ரூபா கொடுத்த புகார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், தனி சமையலறை, டிவி, சொகுசுப்படுக்கை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அது குறித்து டிஐஜி ரூபா எழுதிய புகார் கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அந்தக் கடிதத்தில் மேலும் பலருக்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தது குறித்து விளக்கமாக, ரூபா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவை எதுவும் வெளியுலகுக்கு வராமல் போய்விட்டது.
இந்த நிலையில், தற்போது போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும் பல்வேறு சிறப்புச் சலுகைகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம், வெளியாகி மீண்டும் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. பரப்பன அக்ரஹாரா ஆண்கள் சிறையில் முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில், மசாஜ் செய்ய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மேலும் பல தனிப்பட்ட சொகுசு வசதிகளும், சலுகைகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக டிஐஜி ரூபா தனது புகார் கடிதத்தில் கூறியிருந்தார். அதைப்போலவே தெல்கி உட்பட பல கைதிகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டே, சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் சிலர் இது பற்றிக்கூறுகையில், கைதிகளுக்கு சலுகைகள் செய்துதரப்படுவது பற்றி சிறைத்துறை விதிமுறைகளிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் கொடுத்தால்தான் சலுகைகள் கைதிகளுக்கு கிடைக்கும் என்று சில அதிகாரிகள் கூறி, அதனை, செய்து தருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.