இந்து எதிரிகளை அழிக்க 15,000 பேருடன் ராணுவத்தை உருவாக்கவும் ப்ளான் - தீவிரவாதி தாவ்டே 'ஷாக்' தகவல்
மும்பை: இந்துக்களுக்கு எதிரானவர்கள் மீது தாக்குதலை நடத்த 15,000 பேர் கொண்ட தனி ராணுவம் ஒன்றை உருவாக்க 'சனாதன் சன்ஸ்தா' இந்துத்துவா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டிருந்ததாக அந்த இயக்கத்தின் தாவ்டே சிபிஐ விசாரணையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2009-ம் ஆண்டு கோவா குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சனாதன் சன்ஸ்தன் என்ற இந்துத்துவா தீவிரவாத இயக்கம்தான் காரணம் என சிபிஐ கண்டறிந்தது. இந்த இயக்கத்தின் தலைவர் அகோல்கரை தேடிய போது அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தற்போது அகோல்கரைப் பிடிக்க இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சனாதன் சன்ஸ்தன் இயக்கத்தின் மற்றொரு தீவிரவாதி தாவ்டே கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது தாவ்டேவுக்கும் அகோல்கருக்கும் இடையேயான 25 தொலைபேசி உரையாடல்களை சிபிஐ அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே இ மெயில்களில் எந்த மாதிரியான கோட்வேர்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை தாவ்டே சிபிஐ அதிகாரிகளிடம் விவரித்திருந்தார்.
சிபிஐ அதிகாரிகளைப் பொறுத்தவரையில் தபோல்கர், பன்சாரே, கல்பர்க்கி மற்றும் கோவா குண்டு வெடிப்பு வழக்குகளுக்கான முக்கிய ஆதாரமாக தாவ்டேவை கருதுகிறது... அதாவது ஒரே கல்லில் 4 பறவைகளை வீழ்த்திய திருப்தியில் சிபிஐ அதிகாரிகள் இருக்கின்றனர்.
இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேசியதால்தான் கல்புர்க்கியை இக்கும்பல் படுகொலை செய்திருக்கிறது. அத்துடன் 15,000 பேரை கொண்ட தனி ராணுவம் ஒன்றை உருவாக்கி இந்துக்களுக்கு எதிரானவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் தாங்கள் திட்டமிட்டதாகவும் விசாரணையில் தாவ்டே கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியான விசாரணையில் பல அதிர வைக்கும் தகவல்களை தாவ்டே வெளியிட்டு வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.