கிரேவால் மனநிலை பாதிக்கப்பட்டவரா..? எரிகிற தீயில் எண்ணெய் விட்டு சர்ச்சையில் சிக்கிய விகே சிங்
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி போராடி தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கிரேவால் மனநிலை பாதிக்கப்பட்டவரா என விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மத்திய இணைய
டெல்லி: தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கிரேவால் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மத்திய இணையமைச்சர் விகே சிங்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம் என பாஜக உறுதியளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் திடீரென நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் விகே சிங்கிடம், கிரேவாலின் தற்கொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "முன்னாள் ராணுவ வீரர் கிரேவால் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதிய பிரச்னைதான் அவரது தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனப் பதிலளித்தார்.
ஏற்கனவே, கிரேவாலின் உடலைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விகே சிங் இவ்வாறு கிரேவாலை விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விகே சிங்கின் இந்த கருத்துக்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், "இவ்வாறு கேள்வி எழுப்புவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் வி.கே.சிங். இறந்த வீரர் ஜனாதிபதியிடம் இருந்து 2 முறை பதக்கம் பெற்றவர், மேலும் ராணுவ தலைமை தளபதியிடம் ஒரு முறை பதக்கமும் பெற்று சிறந்த ராணுவ வீரராக திகழ்ந்தவர்'' என தெரிவித்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்பிஎன் சிங் இது குறித்து கூறுகையில், 'வீரரின் மனநலம் குறித்து கேள்வி எழுப்புவது தங்கள் தகுதிக்கு ஏற்றதில்லை' என கண்டனம் தெரிவித்துள்ளார்.