ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு சட்டப்படி செல்லுமா? என ஆய்வு- உச்சநீதிமன்றம்
ரூபாய் நோட்டுகள் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு சட்டப்பூர்வமானதா என ஆய்வு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு சட்டப்படி செல்லுமா? என்பது குறித்து ஆராயப்படும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.
கடந்த நவம்பர் 8-ந் தேதி திடீரென ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகிப் போனது.
கடந்த 2 வாரங்களாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அன்றாட செலவுகளுக்கே பெரும் போராட்டத்தை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காத காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் நாடு முழுவதும் பல நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு மனுவை தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இருப்பினும் மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் ரூபாய் நோட்டுகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இதனை விசாரித்தது.

சட்டப்படி செல்லுமா?
அப்போது, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு சட்டப்படி செல்லுமா என ஆராயப்படும். அதாவது மத்திய அரசின் சட்டப்பூர்வ அந்தஸ்து குறித்து ஆய்வு செய்யப்படும்.

மக்கள் அவதியும் ஆராயப்படும்
அதேபோல் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவதி குறித்தும் ஆராயப்படும். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான அனைத்து வழக்குகள் மீதும் டிசம்பர் 2-ந் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications