நாடு திரும்பிய நர்ஸுகளுக்குக் குவிந்த வேலைவாய்ப்புகள்!
கொச்சி: ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி உயிர்ப் பயத்துடன் 20 நாட்களைக் கழித்து பத்திரமாக மீண்டுள்ள கேரள நர்ஸ்களுக்கு பல்வேறு மருத்துவமனைகள் வேலைவாய்ப்புகளுடன் வரவேற்பு கொடுத்துள்ளன.
மரணத்தின் வாசல் வரை போய் விட்டுத் திரும்பியுள்ள இந்த நர்ஸ்கள், தங்களுக்குப் பிடித்தமான மருத்துவமனையைத் தேர்வு செய்து வேலையில் சேரலாம் என்றும் இவை அறிவித்துள்ளன.
கொச்சி விமான நிலையத்திற்கு இவர்கள் வந்து சேர்ந்ததுமே மருத்துவமனைகளின் வேலை வாய்ப்பு அறிவிப்புகளும் சேர்ந்து அவர்களை வரவேற்றன.

இந்தியா - வெளிநாடு மருத்துவமனைகள்
இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டு மருத்துவமனைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கொச்சி விமான நிலையத்தில் தங்களது வேலைவாய்ப்பு குறித்து இந்த நர்ஸ்களுக்குத் தெரிவித்தனர்.

தொடர்பு எண்களைக் கொடுத்தனர்
இவர்கள் அனைத்து நர்ஸ்களிடமும் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும், மருத்துவமனை குறித்த விவரங்களையும் தெரிவித்ததைக் காண முடிந்தது.

சார்க் நாடுகளில் எதில் வேண்டுமானாலும் சேரலாம்
நியூ மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனையின் தலைமை செயலதிகாரி டாக்டர் பி.ஆர். ஷெட்டி, நர்ஸ்களுக்கு சார்க் நாடுகளில் உள்ள தங்களது எந்த ஒரு மருத்துவமனையிலும் சேரலாம் என்று தகவல் தரப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக சுதாகர் ஜெயராம் என்பவரை பொறுப்பாளராக நியமித்திருப்பதாகவும், அவர் நர்ஸ்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் பணியமர்த்த உதவுவார் என்றும் கூறியுள்ளார்.

அட்லஸ் குரூப்
அதேபோல அட்லஸ் குழுமத் தலைவர் டாக்டர் எம்.எம்.ராமச்சந்திரன், ஈராக்கிலிருந்து திரும்பிய அனைத்து நர்ஸ்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப பணி வழங்க தனது நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அம்ரிதா மருத்துவமனை
மேலும் கொச்சியைச் சேர்ந்த அம்ரிதா மருத்துவ விஞ்ஞான கழகமும், 46 இந்திய நர்ஸ்களுக்கும் தனது மருத்துவனையில் வேலை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மாதா அமிர்தானந்த மயியின் மருத்துவமனை இது.

நர்ஸ்கள் சங்கம் எதிர்ப்பு
ஆனால் இந்த வேலை வாய்ப்புகள் அனைத்துமே விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று நர்ஸ்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. மாறாக, அரசு வேலைதான் இவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்று அது கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஜாஸ்மின்ஷா கூறுகையில் அனைவருமே நிதிப் பிரச்சினை காரணமாகத்தான் கடன் வாங்கி ஈராக்குக்குச் சென்றனர். தற்போது கடனைக் கட்ட முடியாத நிலையில்தான் வந்துள்ளனர். எனவே அரசு இவர்களுக்கு தற்போது அறிவித்துள்ள ரூ. 5000 என்ற நிவாரண நிதி போதாது, மாறாக ரூ. 2 லட்சம் தர வேண்டும். அரசு வேலையும் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications