மே.வங்கம்: பானி பூரி சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி.. மருத்துவமனையில் அனுமதி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் பானி பூரி சாப்பிட்ட 100க்கும் அதிகமானோர் வாந்தி பேதியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹூக்ளி மாவட்டத்தில் சுகந்தா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட டோகாசியா பகுதியில் சாலையோரத்தில் பானி பூரி விற்பனை செய்யப்பட்டது. அந்த பானி பூரி கடையில் வழக்கமான பானி பூரிதான் விற்பனை செய்யப்பட்டது. அக்கடையில் 10 பானி பூரி ரூ30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
டோகாசியா பானி பூரி கடையில் பானி பூரி சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்துள்ளனர்; அவர்களில் பலருக்கும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பானி பூரி சாப்பிட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக 100க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அப்பகுதி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. டோகாசியா, பகிர் ரனகச்சா மற்றும் மகால்டா பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சுகாதாரத்துறையின் சிறப்பு குழுவை மாநில அரசு உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகளை அக்குழு வழங்கி சிகிச்சை அளித்தது. இது மேற்கு வங்கத்தில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வேகமாக பரவும் மிக மோசமான நோய்! காரணம் பானி பூரியாம்.. அதிரடியாக தடை விதித்த நேபாளம்