"எட்டு எட்டா பிரிச்சதுதான் தப்பு".. தவிடுபொடியான அமித் ஷா கனவு.. வங்கத்தில் பாஜக வீழ்ந்தது எப்படி?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக பெரிதும் நம்பி இருந்த ஒரு விஷயம்தான்.. அந்த கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளது. எதை பயன்படுத்தி வென்றுவிடலாம் என்று அந்த கட்சி நினைத்ததோ, அதுதான் அந்த கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மேற்கு வங்க தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜக ஆட்சியை பிடிக்கும், தொங்கு சட்டசபை உருவாகும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
மன வலியோடு சொல்கிறேன்... ஓரிரு நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகும்.. -சு.வெங்கடேசன் அவசரக் கடிதம்..!
ஆனால் பாஜக கூட்டணியோ வெறும் 77 இடங்களில் மட்டும் வெல்ல, திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டதுதான் பாஜகவிற்கு பெரிய அளவில் எதிராக திரும்பி உள்ளது.
சர்வே
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது, அங்கு ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு பெரிய அளவில் உதவியதாக சிஎஸ்டிஎஸ் (Centre for the Study of Developing Societies) சர்வே தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக மொத்தம் நான்கரை வாரம் தேர்தல் நடந்தது. இது முதலில் பாஜகவிற்கு சாதகமாக முடியும் என்றே கணிக்கப்பட்டது.
பாஜக
ஒவ்வொரு கட்டமாக பாஜக குறி வைத்து பிரச்சாரம் செய்யும். இதனால் பாஜக எளிதாக வெற்றிபெறும் என்றே அரசியல் வல்லுநர்கள் பலர் கணித்தனர். ஆனால் இப்படி எட்டாக தேர்தலை பிரித்ததுதான் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. சிஎஸ்டிஎஸ் சர்வேயின்படி, மேற்கு வங்கத்தில் கடைசி நேரத்தில்தான் மக்கள் பலர் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
முடிவு
மொத்தமாக மேற்கு வங்கத்தில் 24% வாக்காளர்கள் கடைசி நொடியில்தான் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த 24% மக்களில் 54% பேர் திரிணாமுல் காங்கிரசுக்கும், 33% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல் 25% வாக்காளர்கள் பிரச்சாரத்தின் போது அல்லது வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த 25% மக்களில் 49% பேர் திரிணாமுல் காங்கிரசுக்கும், 37% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
சிக்கல்
மேலும் 46% வாக்காளர்கள் தேர்தலுக்கு முன்பே யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த 46% மக்களில் 44% பேர் திரிணாமுல் காங்கிரசுக்கும், 42% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.அதன்படி கடைசி கட்டத்தில் பல மனசை மாற்றி, பாஜகவிற்கு பதிலாக திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
ஆதரவு
அதாவது கடைசி நேரத்தில் பாஜகவால் திரிணாமுல் பெறும் வாக்குகளை குறைக்க முடியவில்லை. அதோடு தேர்தலில் பிரச்சாரத்தின் போது அல்லது வேட்பாளரை அறிவித்த பின் மக்கள் பலர் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்றும் முடிவு செய்துள்ளனர். இதுவும் கூட பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.
தேர்தல் கட்டம் 1 - 52% பேர் வேட்பாளரை அறிவித்த பின் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இதில் 47% திரிணாமுல் காங்கிரசுக்கு, 39% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
மற்ற கட்டங்கள்
தேர்தல் கட்டம் 2 - 40% பேர் வேட்பாளரை அறிவித்த பின் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இதில் 50% திரிணாமுல் காங்கிரசுக்கும், 43% பாஜகவிற்கும் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் கட்டம் 3 - 45% பேர் வேட்பாளரை அறிவித்த பின் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இதில் 45% திரிணாமுல் காங்கிரசுக்கு, 43% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் கட்டம் 4 - 56% பேர் வேட்பாளரை அறிவித்த பின் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இதில் 56% திரிணாமுல் காங்கிரசுக்கு, 27% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் கட்டம் 5 - 43% பேர் வேட்பாளரை அறிவித்த பின் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இதில் 53% திரிணாமுல் காங்கிரசுக்கு, 39% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
கடைசி கட்டங்கள்
தேர்தல் கட்டம் 6 - 45% பேர் வேட்பாளரை அறிவித்த பின் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இதில் 51% திரிணாமுல் காங்கிரசுக்கு, 32% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் கட்டம் 7- 51% பேர் வேட்பாளரை அறிவித்த பின் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இதில் 47% திரிணாமுல் காங்கிரசுக்கு, 35% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் கட்டம் 8 - 63% பேர் வேட்பாளரை அறிவித்த பின் யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இதில் 58% திரிணாமுல் காங்கிரசுக்கு, 31% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
மாற்றம்
மொத்தமாக பிரச்சாரத்தின் போது அல்லது வேட்பாளரை அறிவித்த பிறகு யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்தவர்களில் 49% பேர் திரிணாமுல் காங்கிரசை தேர்வு செய்துள்ளனர். 37% பேர் மட்டுமே பாஜகவை தேர்வு செய்துள்ளனர். அதிலும் 8 கட்ட தேர்தலில் ஒவ்வொரு கட்டமாக பாஜக வாக்குகளை இழந்து வந்து இருக்கிறது. போக போக ஒவ்வொரு கட்டத்திலும் பாஜகவிற்கான ஆதரவு குறைந்துள்ளது.
காரணம்
மமதா பானர்ஜி காலில் ஏற்பட்ட காயம், மமதா மீதான அனுதாபம், கொரோனா இரண்டாம் அலை என்று பல விஷயங்கள் பாதி தேர்தலுக்கு மேல் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக மாறி உள்ளது. வங்கத்தில் 46% வாக்காளர்கள் தேர்தலுக்கு முன்பே யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த 46% மக்களில் 44% பேர் திரிணாமுல் காங்கிரசுக்கும், 42% பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இது போக போக ஒவ்வொரு கட்டமாக குறைந்துள்ளது.
குறைந்தது
அதன்படி 8 கட்ட தேர்தல் அமித் ஷாவின் வியூகத்திற்கு எதிராக திரும்பி உள்ளது தெளிவாகிறது. லோக்சபா தேர்தலில் பாஜக கடைசி கட்டத்தில் மக்கள் ஆதரவை பெற்று 18 இடங்களை வென்றது. இதில் திரிணாமுல் 22 இடங்களை வென்றது. இதை போன்ற 8 கட்ட தேர்தல் மூலம் சட்டசபை தேர்தலிலும் பாய்ச்சலை கடைசி கட்டத்தில் நிகழ்த்தலாம் என்று பாஜக திட்டமிட்டது. ஆனால் பாஜகவின் இந்த திட்டமே அக்கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது.