துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎப் மீது என்ன நடவடிக்கை? தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் கடிதம்!
கொல்கத்தா: கூச் பிகார் வாக்குச்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தவறு செய்த சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் கூச் பிகார் போலீஸ் எஸ்.பி. ஆகியோருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்று தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதில் முதல் 3 கட்டங்களில் 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இன்று 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சாவு
இந்த 4-ம் கட்ட வாக்குப்பதில் பல்வேறு இடங்களால் வன்முறை சம்பவங்கள் மூண்டன. சில இடங்களில் பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகளின் கார் மீது உள்ளூர் மக்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களின் காரும் அடித்து நொறுக்கப்பட்டதால் தொடர்ந்து பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் பதற்றம் மிகுந்த கூச் பிகார் வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
அமித்ஷா பதவி விலக மம்தா கோரிக்கை
உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகளை பறித்ததாகவும், இதனால் பாதுகாப்பு படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து கூச் பிகார் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர்(சிஆர்பிஎப்) தான் நடத்தினார்கள் என்றும் இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக கூறினார்.
மோடி பதிலடி
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கூச் பிகார் சம்பவம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
என்ன நடவடிக்கை?
அந்த கடிதத்தில், ' நீங்கள் நடத்திய ஜனநாயாக திருவிழாவில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பங்கேற்றது அவர்களின் தவறா? இந்திய உள்துறை அமைச்சகம் கூறிய உத்தரவை சிஆர்பிஎப் பின்ப்பற்றுகிறது. தவறு செய்த சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் கூச் பிகார் போலீஸ் எஸ்.பி. ஆகியோருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? இந்த கொலைச் செயலுக்கு காரணமாக இருந்த இந்திய மூத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.