இம்ரான் கான் காலில் பாய்ந்த குண்டு.. கண் இமைப்பதற்குள் மளமளவென சுட்டுதள்ளிய நபர்.. நடந்தது என்ன?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காலில் குண்டு பாய்ந்தது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? எதற்காக நடந்தது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் நுழைந்து உச்சபட்ச பிரதமர் பதவியை அடைந்தவர் தான் இம்ரான் கான்.
பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் (பிடிஐ) எனும் கட்சியை இம்ரான் கான் நடத்தி வருகிறார். இவர் தலைமையில் பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி நடந்தது.
இம்ரான் கானை துளைத்த துப்பாக்கி குண்டு.. இந்தியாவின் ‛‛ரியாக்சன்’’ என்ன தெரியுமா? இதோ விபரம்
பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான்
இம்ரான் கான் பிரதமராக இருந்தார். 2018 முதல் இந்த ஆண்டு துவக்கம் வரை அவர் பிரதமராக இருந்தார். இந்நிலையில் கூட்டணி குழப்பத்தால் பிரதமர் பதவியை இம்ரான் கான் இழந்தார். புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஷெபாஸ் ஷெரீப் அரசை இம்ரான் கான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
பொதுத்தேர்தல் நடத்த கோரிக்கை
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, ஊழல், முறைகேடு ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கலைக்க வேண்டும். உடனடியாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனை வலியுறுத்தி தான் தற்போது பாகிஸ்தானின் பல இடங்களில் தொடர்ந்து இம்ரான் கான் கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.
இம்ரான் கான் பேரணி
ஒருவேளை ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கலைக்காவிட்டாலும் கூட அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனால் அதற்கு தயாராகும் வகையில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இம்ரான் கான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதன்படி பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.
கையசைத்த இம்ரான் கான்
இந்த பேரணி பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் வஜிராபாத் அருகே பேரணி சென்றது. இந்த பேரணியில் கண்டெய்னர் மீது நின்று இம்ரான் கான் பேச இருந்தார். இந்நிலையில் தான் இந்த பேரணியில் கண்டெய்னர் மீது தொண்டர்கள், தலைவர்களுடன் இம்ரான் கான் அமர்ந்து இருந்தார். அதன் முன்பும் பின்பும் கார்கள் ஊர்வலமாக சென்றன. கண்டெய்னரின் முன்புறத்தில் கால்களை தொங்கவிட்டபடி தொண்டர்களை நோக்கி கையசைத்து இம்ரான் கான் வந்து கொண்டிருந்தார்.
சரமாரியாக சுட்ட மர்மநபர்
இந்த பேரணி குஜ்ரன்வாலா என்ற இடத்தை அடைந்தது. அப்போது திடீரென்று கூட்டத்தில் தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்த நபர் சரமாரியாக இம்ரான் கானை நோக்கி தொடர்ந்து சுட்டார். சில வினாடிகளில் அவர் பலமுறை தொடர்ந்து சுட்டார். இ துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டுகள் இம்ரான் கான் மற்றும் அவர் அருகே இருந்தவர்களை துளைத்தது. இதனால் அவர்கள் அனைவரும் தங்களை பாதுகாக்க கண்டெய்னர் மீது அமர்ந்தபடியே முயற்சித்தனர். இருப்பினும் பலரது உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
இம்ரான் கானை துளைத்த குண்டு
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்பட 5 பேரை துப்பாக்கி குண்டு துளைத்தது. இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக காரில் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் இம்ரான் கான் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வெளியான வீடியோக்கள்
இதற்கிடையே தான் துப்பாக்கியால் சுட்ட நபர் அந்த இடத்தில் இருந்து ஓட முயற்சித்தார். இருப்பினும் அங்கு இருந்தவர்கள் அவரை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் தான் இம்ரான் கானை நோக்கி துப்பாக்கி குண்டுகள் சுடப்படும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் கைதான நபர், ‛‛இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார். இதனால் தான் அவரை கொலை செய்ய முயற்சித்தேன்'' என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.