சீக்கிரம் வெளியேறுங்கள்.. அரசு வார்னிங்.. காஷ்மீரில் பதற்றம்.. அதிரடியாக குவிக்கப்படும் ராணுவம்!
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடியாக குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா பாகிஸ்தான் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முழுக்க இந்தியா பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வந்தது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 அதை தொடர்ந்து விண்வெளியில் நடந்த விமானப்படை சண்டை, விமானி அபிநந்தன் சிறைபிடிப்பு என்று நிறைய பிரச்சனைகள் இரண்டு நாட்டிற்கும் இடையில் நடந்தது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சமரசத்தால் பிரச்சனை சுமுகமாக முடிந்தது.
ஆனால் என்ன
ஆனால் தற்போது பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் ராணுவம் வேகமாக குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக காஷ்மீர் பிரச்சனை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. திடீர் என்று துணை ராணுவப்படையினர் அதிக அளவில் காஷ்மீர் எல்லையில் நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.
எத்தனை பேர்
லோக்சபா தேர்தல் முடிந்த போதே காஷ்மீர் எல்லையில் 40,000 துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர். அதன்பின் கடந்த சனிக்கிழமை 10 ஆயிரம் வீரர்கள் மீண்டும் குவிக்கப்பட்டார்கள். இந்த நிலையில் இன்று மீண்டும் 10 ஆயிரம் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்ன எச்சரிக்கை
அதேபோல் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால்தான் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என்றும் இந்திய உளவுத்துறை சார்பாக இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
என்ன சந்திப்பு
இந்த சர்ச்சை தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல கடந்த வாரம் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார். அங்கு முக்கிய அதிகாரிகள், ராணுவ வீரர்கள், உளவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் எதோ பிரச்சனை நடக்க போகிறது என்று அப்போதே வல்லுநர்கள் எழுத தொடங்கினார்கள்.
என்ன செய்தனர்
இந்த நிலையில் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நடக்கும் பகுதியில் இன்று கன்னி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய ராணுவம் மூலம் இந்த குண்டுகள் அகற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் அங்கு பாகிஸ்தான் ராணுவத்தில் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
அமர்நாத் யாத்திரை
ஏற்கனவே அங்கு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. கடந்த 27 நாட்களில் மட்டும் மொத்தம் 3,17,726 பேர் அங்கு குகையில் தரிசனம் செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மொத்தமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
என்ன கோரிக்கை
அங்கு ஏற்கனவே யாத்திரை சென்றவர்களை திரும்பி வந்து காஷ்மீரில் இருந்து வெளியேறும்படி அரசு கோரிக்கை வைத்துள்ளது. காஷ்மீரில் நடக்க போகும் தேர்தலுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் போர் நடப்பதற்கான மேகங்கள் ஜம்மு காஷ்மீரில் சூழ்ந்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.