'காவி' சால்வை அணிந்து அமெரிக்க அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி!
டெல்லி: டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை பிரதமர் மோடி வரவேற்றபோது, மோடியின் தோளில் காவி சால்வை பளிச்சிட்டது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை டெல்லி வந்தார். அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பிய அவர்கள் இன்று காலை டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள்.
அவர்களின் வருகையையொட்டி விமான நிலையத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மோடி
பிரதமர் மோடி வழக்கத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கே வந்து ஒபாமாவை வரவேற்க காத்திருந்தார். வழக்கமாக அமைச்சர்கள்தான் வெளிநாட்டு தலைவர்களை முதலில் வரவேற்பார்கள்.
ஒபாமா
ஒபாமா, தனது மனைவி மிஷலின் கையை பிடித்துக் கொண்டு விமானத்தில் இருந்து இறங்கி வந்தார். தன்னை வரவேற்க நின்றிருந்தவர்களை பார்த்து ஒபாமா கையசைத்தார்.
சிரிப்பு
மோடியை பார்த்தும் ஒபாமாவின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிந்தது போன்று ஒரு பிரகாசம். அதே போன்று மோடியும் ஒபாமாவை பார்த்ததும் பிரகாசமாக புன்னகைத்தார்.
கட்டிப்பிடி
ஒபாமா மோடியுடன் கை குலுக்கினார். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்தனர். அதன் பிறகு இருவரும் கையை குலுக்கிக் கொண்டே சில நிமிடங்கள் சிரித்தபடியே பேசினர்.
மிஷல்
ஒபாமாவுடன் பல நிமிடங்கள் கை குலுக்கிய மோடி மிஷலுக்கு கை கொடுக்கவில்லை. புன்னகை புரிந்ததோடு சரி.
காவித் துண்டு
ஒபாமாவை வரவேற்க வந்திருந்த மோடியின் தோளில் பெரிய காவி சால்வை பளிச்சிட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
குறிப்பால் உணர்த்தினாரா
குஜராத் கலவரம் தொடர்பாகத் தான் அமெரிக்கா மோடிக்கு பல ஆண்டுகளாக விசா வழங்க மறுத்தது. இந்நிலையில் மோடி காவி சால்வை அணிந்து வந்து ஒபாமாவை வரவேற்றது, அமெரிக்காவுக்கு எதையோ உணர்த்துவது போல இருந்தது.
முதல் அதிபர்
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. மேலும் இரண்டு முறை இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபரும் அவர் தான்.
காங்., பாஜக
ஒபாமா முதல் முறையாக இந்தியா வந்தபோது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்ளது குறிப்பிடத்தக்கது.