மோடி கேபினட்டில் இடம் பிடிக்கும் அமைச்சர்கள் இவர்கள் தான்!
டெல்லி: 16வது லோக்சபா தேர்தலில் தனிமெஜாரிட்டியில் வெற்றி பெற்று 10 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் மத்தியில் பாஜக ஆட்சியைக்கைப்பற்றி உள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முறைப்படி லோக்சபா கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் நாட்டின் 15-வது பிரதமராக வரும் 21-ந் தேதி பதவி ஏற்கிறார்.
284 இடங்களை கைப்பற்றிய பாஜக
தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பாஜக மட்டும் 284 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தனிப் பெரும்பான்மை
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த எண்ணிக்கையை பாஜக எளிதாக தாண்டியுள்ளது.
அமைச்சரவையில் யார்?யார்?
பாஜகவிற்கு வெற்றி உறுதி என்று எக்ஸிட்போல் முடிவுகள் வெளியான உடனேயே அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவது என்று பாஜக முன்னாள் தலைவர் நிதின்கட்கரி மற்றும் மூத்த தலைவர்களுடன் மோடி ஆலோசனை செய்திருக்கிறார். இதில் யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி கொடுப்பது என்றும் பேசியுள்ளனராம்.
சாதகமான முடிவு
இப்போது முடிவு பாஜகவிற்கு சாதகமாகவே வந்திருப்பதால், முக்கிய பொறுப்பு அமைச்சர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுஷ்மா ஸ்வரராஜ்
கடந்த முறை லோக்சபா எதிர்கட்சித்தலைவராக பதவி வகித்த சுஷ்மா ஸ்வரராஜ்க்கு பாஜக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்நாத்சிங்
பாஜக தேசிய தலைவரான ராஜ்நாத்சிங்கிற்கு உள்துறை அல்லது பாதுகாப்புத்துறை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண்ஜெட்லிக்கு பதவி உறுதி
நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பரான அருண்ஜெட்லி தான் போட்டியிட்ட அமிர்தசரஸ் தொகுதியில் 90000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். ஆனாலும் மத்திய அமைச்சரவையில் உள்ள நான்கு முக்கிய அமைச்சர் பொறுப்பில் ஒருவராக அவரை அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பியாக அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என கூறப்படுகிறது.
ஹர்சவர்தன் -ஸ்மிருதி இரானி
டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்சவர்தன், அமேதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத்
மோடியின் நெருங்கிய நண்பரான அமித்ஷா,பாஜகவின் செய்தித்தொடர்பாளர்களான ரவிசங்கர் பிரசாத், ஷாநவாஷ் ஹூசைன்,ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோரும் அமைச்சர்களாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேபோல பாஜக பொருளாளரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மிகமுக்கிய பங்காற்றியவருமான பியூஸ்கோல் அமைச்சரவையில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.
ராம்விலாஸ் பஸ்வான்
பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி 31 இடங்களை கைப்பற்றியுள்ளது. அம்மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற காரணமாக இருந்த லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் நரேந்திரமோடி அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நரேஷ் குஜ்ரால்
சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவரான நரேஷ் குஜ்ரால் நிச்சயம் மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் ஆந்திராவில் தெலுங்குதேசகட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உடனான கூட்டணி உதவியது நரேஷ் குஜ்ரால்தானாம்.
நிதின்கட்கரி – வருண்காந்தி
பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் நிதின்கட்கரி, மேனகா காந்தியின் மகன் வருண்காந்தி, இமாசலபிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார்துமாலின் மகன் அனுராக் தாகூர் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது.
ஜெயந்த் சின்ஹா
அதேபோல வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா, மோடியின் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது. அவர் டெல்லி ஐஐடியில் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர். தந்தை வழியில் அரசியலில் ஈடுபட்டு எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார்.