மேற்கு வங்க சட்டசபை தேர்தல்.. நான்குமுனைப் போட்டி.. "பாஜக பயங்கர எழுச்சி.." மமதா வெற்றி சாத்தியமா?
கொல்கத்தா: தமிழகத்தைப் போலவே அகில இந்திய அரசியலில் முக்கியத்துவம் பிடித்துள்ளது மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள்.
295 உறுப்பினர்களைக் கொண்ட தமிழகத்தை விட பெரிய மாநிலம் மேற்கு வங்கம். சட்டசபையில் மேஜிக் நம்பர் 148 ஆகும். மேற்கு வங்க சட்டமன்ற வாக்குப் பதிவு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது.
அண்மையில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தல்களிலும், 11 மாநிலங்களின் இடைத்தேர்தல்களிலும் என்டிஏ (பிஜேபி + கூட்டணி கட்சிகள்) அமோக வெற்றி பெற்றுள்ளது. கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இதுவரை காணாத சவாலை பாஜக இந்த தேர்தலில் தர காத்திருக்கிறது.
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (டி.எம்.சி) தலைவரான மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முதன்முதலில் 2011ம் ஆண்டு மே 20ம் தேதியன்று மேற்கு வங்க முதல்வரானார். 2016ம் ஆண்டில் மீண்டும் மாநில மக்களின் ஆசியை பெற்று அரியணை ஏறினார்.
மேற்கு வங்கம் களம் எப்படி?
இடதுசாரி கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மீண்டும் எழுச்சியை பெற முடியுமா என முயல்கின்றன. ஆனால் தற்போதைய நிலைமையில் அதற்கான சிறிய வாய்ப்பு கூட கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. முஸ்லீம் வாக்குகளை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர், அசாதுதீன் ஓவைசி பிரித்து மமதா பானர்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்துவார் என்பது மற்றொரு களச் சூழலாக இருக்கிறது. CAA மற்றும் NRC ஆகியவை மேற்கு வங்கத்தில் சூடு கிளப்பும் நிலையில், முஸ்லீம்கள் ஒரே அணியாக மமதா பின்னால் போகாமல் ஓவைசிக்கு ஓட்டை பிரித்துப் போட்டால், ஆதாயம் பாஜகவுக்கு கிடைக்கும்.
திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி
திரிணாமுல் காங்கிரஸ் + கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா + கோர்கா தேசிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டாக தேர்தலை சந்திக்க உள்ளன. இது ஒரு அணியாகும். 65 வயதான மம்தா பானர்ஜி தலைமையில், திரிணாமுல் காங்கிரஸ் அடுத்தடுத்து இருமுறை ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளது.
மத்திய ரயில்வே துறையின் அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் மமதா பானர்ஜி. அனுபவசாலி. 1970களில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை துவங்கினார். 1998 இல் தனது டி.எம்.சி கட்சியை நிறுவினார்.
தலைவியாக மாறிய மமதா பானர்ஜி
நந்திகிராம் கிளர்ச்சிதான் மக்கள் தலைவராக அவரை உருவாக்கியது. அப்போதிருந்து, தனக்கு முன்பு, தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - சிபிஐ (எம்) வாக்காளர்களை தன்பக்கம் இழுப்பதில் வெற்றி பெற்றார். பாஜகவின் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கும் முகுல் ராய் ஒரு காலத்தில் டிஎம்சியில் மமதாவுக்கு அடுத்த தலைவராக இருந்தார். மம்தா மற்றும் அவரது மருமகன் அபிஷேக்கின் "எதேச்சதிகார போக்குகள்" முகுல் ராய் போலவே அந்த கட்சியிலுள்ள பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அரசியல் பண்டிதர் மற்றும் தேர்தல் பிரச்சார நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கு மமதா அதிக உரிமைகளை கொடுத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாஜக தீவிரம்
மேற்கு வங்கத்தை கைப்பற்றும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முகுல் ராய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவுக்கு தாவினார். கடந்த செப்டம்பரில் பாஜக தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். திரிணாமுலில் இருந்து வந்த மற்றொரு பாஜக தலைவர் அனுபம் ஹஸ்ரா பாஜக தேசியக் குழுவில் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில், மம்தாவின் கட்சி பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. ஆனால் 2016 முதல் 2021 வரையிலான இடைத்தேர்தல்களில் பாஜக கணிசமாக வென்று, சட்டமன்றத்தில் தனது இடங்களை 15 ஆக உயர்த்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் டிரெண்ட்
மேலும், 2019 பொதுத் தேர்தலில், 42 மக்களவைத் தொகுதிகளில் 18 ஐ பாஜக வென்றது, திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களை வென்றது. இதில் மமதா கடும் அதிர்ச்சியடைந்தார். 2014 ஆம் ஆண்டில், திரிணாமுல் 34 தொகுதிகளை வென்றிருந்தது. 2019 பொதுத் தேர்தல் டிரெண்ட்படி பார்த்தால், 161 சட்டமன்ற தொகுதிகளில் திரிணாமுல் வெல்ல முடியுமாம். மெஜாரிட்டிக்கு தேவையான மேஜிக் எண்ணைவிட இது 16 அதிகம். பாஜக 123ல் வெல்ல முடியும். ஆனால் இது லோக்சபா தேர்தல் வாக்கு வங்கி அடிப்படையில் கணிக்கப்படுவது.
காங்கிரஸ் கூட்டணி
ஒரு காலத்தில் மாநிலத்தை ஆட்சி செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் ஆகியவற்றுடன் இந்திய தேசிய காங்கிரஸ் அங்கு கூட்டணி அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பிளஸ் காங்கிரஸ் கூட்டணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களை வென்ற போதிலும் (26 சிபிஐ-எம்க்கு போனது), இரு கட்சிகளும் அதன் பின்னர் தங்கள் செல்வாக்கு குறைந்துள்ளதை உணர்ந்துள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.
ஓவைசி கட்சி
அசாதுதீன் ஒவைசி கட்சி இந்த தேர்தலில் தனியாக களம் காணப்போகிறது. மமதா பானர்ஜி பல ஆண்டுகளாக தன்னைச் சுற்றி முஸ்லீம் வாக்காளர்களை தக்க வைத்து வந்துள்ளார். இதனால் தீவிர வலதுசாரிகள் பாஜக பக்கம் சாய ஆரம்பித்தனர். இப்போது முஸ்லீம் ஓட்டுக்களை அசாதுதீன் ஓவைசி பிரித்து எடுத்தால், இரண்டு பக்கமும் வாக்குகள் குறைந்து மமதா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்படும். பீகாரில் ஓவைசி கட்சி வாக்குகளை பிரித்தது பாஜக கூட்டணிக்கு சாதகமாக மாறியது. ஆக மொத்தம் நான்கு பக்க மோதல்களில் வெற்றி யாருக்கு என்ற செம எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மேற்கு வங்கத் தேர்தல்கள்.