சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 21 முஸ்லீம் எம்.பிக்களே நாடாளுமன்றத்துக்குத் தேர்வு!
டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு முஸ்லீம் சமுதாயத்திலிருந்து 21 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். இது இதுவரை இருந்த நாடாளுமன்ற முஸ்லீம் பிரதிநிதித்துவத்திலேயே மிகவும் குறைவாகும்.
மேலும் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவிலிருந்து ஒரு முஸ்லீம் கூட நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்றத்தில் 28 முஸ்லீம்கள் எம்.பிக்களாக இருந்தனர். ஆனால் புதிய நாடாளுமன்றத்தில் இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
பாஜகவுக்கு வரலாறு காணாத வெற்றி.. முஸ்லீம்களுக்கு வீ்ழ்ச்சி
பாஜகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு நாடாளுமன்றத்தில் பெரும் வீ்ழ்ச்சியே கிடைத்துள்ளது.
வெறும் 21 எம்.பிக்களே
புதிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளது வெறும் 21 முஸ்லீம் சமுதாயத்தினரே. இது அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தோற்றதால்
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாடிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவைதான் முஸ்லீம்களுக்கு அதிக அளவில் சீட் கொடுத்திருந்தனர். ஆனால் இக்கட்சிகள் தோற்றதால் இவர்களின் முஸ்லீம் வேட்பாளர்களும் தோற்றுப் போய் விட்டனர்.
உ.பியிலிருந்து ஒருவர் கூட இல்லை
மேலும் சுதந்திரமடைந்த பின்னர் உ.பியிலிருந்து இந்த முறைதான் ஒரு முஸ்லீம் கூட நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை.
தோற்கடிக்கப்பட்ட பாஜகவின் ஷாநவாஸ் உசேன்
பாஜகவிலிருந்து சையத் ஷானவாஸ் உசேன் பீகார் மாநிலம் பேகல்பூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரை லாலு கட்சி வேட்பாளர் சைலேஷ் குமார் தோற்கடித்து விட்டார். உசேன் வென்றிருந்தால் மத்திய அமைச்சராகியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்திலிருந்துதான் அதிகம்
மேற்கு வங்கத்திலிருந்துதான் அதிக அளவிலான முஸ்லீம்கள் லோக்சபாவுக்குத் தேர்வாகியுள்ளனர். இங்கிருந்து 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 3 பேர் திரினமூல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். சிபிஎம் சார்பில் இருவரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும் தேர்வாகியுள்ளனர்.
பீகாரிலிருந்து 4 பேர்
பீகாரிலிருந்து 4 முஸ்லீம்கள் நாடாளுமன்றம் போகின்றனர். ஆந்திராவிலிருந்து ஒருவர் மட்டும் தேர்வாகியுள்ளார்.
அஸ்ஸாமில் 2 பேர்
அஸ்ஸாமிலிருந்து 2 பேரும், ஜம்மு காஷ்மீரிலிருந்து 3 பேரும் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர்.
கேரளாவிலிருந்து 2
கேரளாவிலிருந்து முஸ்லீ்ம் லீக்கைச் சேர்ந்த இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர். லட்சத்தீவிலிருந்து ஒருவர் வென்றுள்ளார்.
தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டுமே
தமிழகத்திலிருந்து அதிமுகவின் அன்வர் ராஜா மட்டுமே நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார்.