ஜார்க்கண்டில் பாஜக தோற்க ஒரே காரணம்.. இதுவே முழு காரணம்.. இது நடந்திருந்தா கதையே வேற.. ரிப்போர்ட்
ராஞ்சி: ஜார்க்கண்டில் பாஜக எஜேஎஸ்யூ கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் இந்நேரம் அந்த கூட்டணிக்கு மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 40 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்று பகுப்பாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் பெற்ற ஓட்டுகள், வாக்கு சதவீதம் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
81 தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக தனியாகவும், ஏஜெஎஸ்யு தனியாகவும், காங்கிரஸ், ஜேஎம்எம், ஆர்ஜேடி ஆகியவை இணைந்து ஒரு கூட்டணியாகவும் போட்டியிட்டன.
பாஜக 25 இடம்
இதில் காங்கிரஸ், ஜேஎம்எம், ஆர்ஜேடி கூட்டணி 47 தொகுதிகளில் வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதேநேரம் பாஜக 25 இடங்களிலும், ஏ.ஜே.எஸ்.யு கட்சி உள்பட மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கூட்டணி
உண்மையில் இந்த தேர்தலில் பாஜகவும் ஏ.ஜே.எஸ்.யு கட்சியும் தனித்தனியாக அல்லாமல் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால், அவர்கள் இந்நேரம் பெரும்பான்மைக்கு நெருங்கி இருப்பார்கள். அதாவது 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் 40 இடங்களை வென்று இருப்பார்கள். அதேநேரம் காங்கிரஸ் ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணி 34 இடங்களையே பிடித்திருக்கும், இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்திருப்பதற்காக சூழல் ஏற்பட்டு இருக்கும் என்கிறது வாக்கு சதவீத ஆய்வு நிலவரங்கள்.
வாக்கு சதவீதம்
இந்த தேர்தலில் பா.ஜ.க-ஏ.ஜே.எஸ்.யு கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 41.5%, ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கட்சிக்கு 35.4% மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் ஆறு சதவீதம் அதிகமாக உள்ளது. இதன்படி பார்த்தால் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 81 இடங்களிலும் பா.ஜ.க-ஏ.ஜே.எஸ்.யு கட்சிகள் தனித்தனியாக நின்றதால் இதற்க வாய்ப்பு இல்லாமல் போனது.
தோற்க இதுவே காரணம்
பா.ஜ.கவின் வெற்றிக்கான வாக்குகளை ஏ.ஜே.எஸ்.யு கட்சி பல இடங்களில் பிரித்திருக்கிறது. அப்படி நடக்காமல் இருந்திருந்தால் பாஜக கூடுதலாக 9 இடங்களையும் ஏ.ஜே.எஸ்.யு கட்சி கூடுதலாக 4 இடத்தை வென்றிருக்கும். இதன் மூலம் பாஜக (25+9) 34 இடங்களையும், ஏ.ஜே.எஸ்.யு கட்சி (2+4) 6 இடங்களையும் பெற்று இருக்கும் இதன் மூலம் இரு கட்சிகளும் இணைந்து மொத்தம் உள்ள 81 இடங்களில் 40 இடங்களை பிடித்திருக்கலாம். இதன் மூலம் பிற கட்சிகளின் உதவியுடன் பாஜக ஆட்சியை அமைத்திருக்க முடியும். ஆனால் இருவரும் பிரிந்ததே பாஜக ஜார்க்கண்டில் தோற்க காரணமாக அமைந்துள்ளதாக வாக்கு சதவீத ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.