ஜாக்கிரதையா இருங்க! குஜராத் முடிவிற்கு முன்பே பாஜக மேலிடம் மீட்டிங்.. தமிழ்நாட்டிற்கு பறந்த மெசேஜ்!
காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ள நிலையில் தேசிய அளவில் பாஜக 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்தில் 182 தொகுதிகளில் இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இரண்டாம் கட்ட தேர்தல் 14 மாவட்டங்களில் உள்ள 93 இடங்களில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவிகித வாக்குகள் பதிவானது.
குஜராத்தில் கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. குஜராத் பாஜகவின் கோட்டையாக உள்ளது. 1995ல் இருந்து அங்கு பாஜக ஆட்சிதான் உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் கருத்து கணிப்புகளும் குஜராத்தில் பாஜக ஆட்சிதான் மீண்டும் அமையும் என்று தெரிவித்து உள்ளது.
குஜராத்தில் வெற்றிபெற போவது யார்? பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்? கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில்தான் கடந்த திங்கள் - செவ்வாய் பாஜக சார்பாக டெல்லியில் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்று உள்ளது. குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக வரும் என்ற தகவல் கிடைத்த நிலையில்தான் பாஜக இந்த அவசர கூட்டத்தை டெல்லியில் நடத்தி இருக்கிறது. குஜராத்தில் பாஜக வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக பாஜக மேலிடத்திற்கு உளவுத்துறை கணிப்புகள் தெரிவித்த நிலையில்தான் இந்த கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திங்கள் - செவ்வாய் என்று இரண்டு நாட்களுக்கு அங்கு இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டம்
பாஜக மாநில தலைவர்கள். மாநில பொதுச்செயலாளர், முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் 2024 லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராக இருங்கள். கூட்டணிகளை பற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் கட்சியை உள்ளூர் அளவில் வலிமையாக்குங்கள். எங்கெல்லாம் பாஜக வீக்காக இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜகவை வலிமைப்படுத்தும் பணிகளை தொடங்குங்கள்.
டாஸ்க்
உள்ளூர் அளவில் பூத் கமிட்டியை வலிமைப்படுத்துங்கள். பாஜகவின் பலம் பூத்தான். 5000 வாக்குகள் வேறுபாடு உள்ள தொகுதிகளில் எல்லாம் பாஜகதான் வெற்றிபெற வேண்டும். அதற்கு பூத் அளவில் நீங்கள் பணிகளை செய்ய வேண்டும். உங்களுக்கு என்று தனி தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த டாஸ்க்குகளை முடியும். அதோடு பூத் கமிட்டியை பலப்படுத்துங்கள். 2019 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக சிறப்பாக செயல்பட்டது. இதற்கு காரணம் பூத் கமிட்டி. அவர்களை போல உங்கள் மாநிலங்களிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
தொகுதிகள்
ஒரு சில தொகுதிகள்தான் ஸ்விங் தொகுதிகள். இந்த தொகுதிகளில் வலுவாக பூத் அமைக்கப்பட்டால் நாம் வெற்றிபெற முடியும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கட்சி கூட்டத்தில் பேசப்பட்டு இருக்கிறதாம். எங்கெல்லாம் பின்னடைவு இருக்கிறதோ அங்கெல்லாம் உடனே கட்சியை வலுப்படுத்த பாருங்கள். வேலையில் இறங்குங்கள். உங்களை கண்காணிக்கிறோம். ஜாக்கிரதையாக இருங்கள் என்று மாநில நிர்வாகிகளுக்கு தேசிய பாஜக தலைவர் நட்டா இந்த கூட்டத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு பாஜகவில் வேற்று கட்சியினர் பலர் இணைந்துள்ளனர். அவர்கள் பல பொறுப்புகளில் உள்ளனர்.
கட்சி
ஆனால் கட்சி ரீதியாக தேர்தல் பொறுப்புகள் பல மாநிலங்களில் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த பணிகளை உடனே தொடங்குங்கள். மாற்று கட்சியில் இருந்து வந்த பெரிய நிர்வாகிகளுக்கு தேர்தல் பொறுப்புகளை வழங்குங்கள். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுப்போம். நீங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள். 2024 தேர்தலுக்கு இப்போதே பணிகளை தொடங்குங்கள் என்று இந்த மீட்டிங்கில் கூறப்பட்டு இருக்கிறதாம். குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், பெரும்பாலும் லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்தே இந்த கூட்டமும் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு
இதையடுத்தே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. பாஜக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பாஜக உட்கட்சி மோதல் தொடங்கி லோக்சபா தேர்தல் வரை பல விஷயங்கள் பற்றி இதில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று முதல்நாள் இரவு சென்னை வந்த அண்ணாமலை இன்று அவசர அவசரமாக உட்கட்சி கூட்டத்தை நடத்த உள்ளார். கட்சியின் டாப் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். உட்கட்சி பூசல், லோக்சபா தேர்தல், பூத் கமிட்டி உருவாக்கம், கூட்டணி அமைப்பது போன்ற விவரங்கள் குறித்து அண்ணாமலை ஆலோசனை செய்ய உள்ளார். டெல்லி தரப்பில் இருந்து தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு பூத் தொடர்பாக முக்கியமான ஆலோசனை ஒன்று வழங்கப்பட்டு உள்ளதாம். அதன்படி இப்போதே ஏரியா வாரியாக பூத் கமிட்டியை அமையுங்கள். உடனே பூத் கமிட்டியை உருவாக்கும் வேலையை பாருங்கள். பாஜகவை அடி மட்டத்திலிருந்து வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுங்கள் என்று டெல்லியில் இருந்து தமிழ்நாட்டில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கு டோஸ் விடப்பட்டு உள்ளதாம். இது தொடர்பாக இன்று ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.