பெரிய ட்விஸ்ட்.! காணாமல் போகும் குலாம் நபி ஆசாத் கட்சி.. ஆதரவாளர்கள் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் குலாம் நபி ஆசாத்துடன் இணைந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பல முக்கிய தலைவர்களும் இப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பூஸ்ட்டை தருவதாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே சிக்கல் மேல் சிக்கல் தான். கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள், இமாச்சல் தவிர எந்தவொரு மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழலே உள்ளது.
தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவுக்குச் சவால் கொடுக்க முடிவதில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். பாஜக வலுவாக இல்லாத பஞ்சாபிலும் கூட ஆம் ஆத்மியிடம் தோல்வியடைந்தது காங்கிரஸ்!
ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்! காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!
குலாம் நபி ஆசாத்
மேலும், கட்சிக்கு உள்ளேயும் குழப்பம் தொடர்ந்து வருகிறது. சில காலத்திற்கு முன்பு வரை அங்குக் கட்சியில் இருந்து வரிசையாக பல்வேறு தலைவர்களும் விலகி வந்தனர். சிந்தியா, கபில் சிபில் என இந்த லிஸ்ட் மிகப் பெரியது. இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகினார். குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் போது, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையை அவர் மிகக் கடுமையாகச் சாடினார்..
தலைவலி
ராகுல் காந்தி குழந்தைத்தனமாகச் செயல்படுவதாகவும் விமர்சித்த அவர் காங்கிரஸ் கட்சி கிட்டதட்ட முடிந்துவிட்டது என்றும் பேசினார். அவர் முதலில் பாஜகவில் இணைவார் என்று சொல்லப்பட்டது. இருப்பினும், அவர் காஷ்மீரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் காங்கிரஸில் இருந்து விலகிய சில நாட்களிலேயே, அவரது ஆதரவாளர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகினர். இதனால், காஷ்மீரிலும் வலுவாக இருந்த காங்கிரஸ் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டது. அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் எனச் சொல்லப்படும் நிலையில், காங்கிரஸுக்கு தலைவலியாக இருந்தது.
மீண்டும் காங்கிரஸில் ஐக்கியம்
இந்தச் சூழலில் காஷ்மீரில் அரசியல் கிளைமேட் மாற தொடங்கியுள்ளது. இது காங்கிரஸுக்கு உற்சாகம் தரும் மாற்றமாகவே உள்ளது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸுக்கு பெரிய பூஸ்ட்டாக, குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து விலகிய பல முக்கிய நிர்வாகிகள் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளனர். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை விரைவில் காஷ்மீரில் நுழைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அவர்கள் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
விசுவாசிகள்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளனர். சந்த் தவிர, முக்கியத் தலைவர்களான முன்னாள் அமைச்சர் பீர்சாதா முகமது சயீத், முசாபர் பர்ரே மற்றும் பல்வான் சிங் ஆகியோரும் காங்கிரஸுக்கு திரும்பியுள்ளனர். குலாம் நபி ஆசாத்தின் விசுவாசிகளாக சந்த் மற்றும் பல்வான் சிங் கருதப்பட்டனர். ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியதும் அவரை பின்பற்றி முதலில் விலகியவர்கள் இவர்கள் தான். குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக ஆசாத் கட்சியில் இவர்கள் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நிர்வாகிகள்
காங்கிரஸ் கட்சிக்கு இது மிக முக்கியமான ஒரு நாள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் முஜாஃபர் பர்ரே, மொஹிந்தர் பரத்வாஜ், பூஷன் டோக்ரா, வினோத் சர்மா, நரீந்தர் சர்மா, நரேஷ் சர்மா, உள்ளிட்ட பலர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினர்.. இவர்கள் அனைவருமே ஜனநாயக ஆசாத் கட்சியில் இருந்தனர். இருப்பினும், அவர்களில் சிலரைக் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஆசாத் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் பாத யாத்திரை விரைவில் காஷ்மீருக்குள் அடியெடுத்து வைக்க உள்ளது. கன்னியாகுமரியில் தனது யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, காஷ்மீரில் இதை முடிக்க உள்ளார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி, ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்த பாத யாத்திரைக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாகக் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வரும் சூழலில், குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்களும் காங்கிரஸுக்கு திரும்பியுள்ளனர்.