மேற்கு வங்கத்தில் வங்கதேச தீவிரவாதிகள் அட்டூழியம்: மமதா மௌனம் ஏன்?
கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் புர்த்வான் குண்டுவெடிப்பு பற்றி மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மௌனமாக இருப்பதால் ஆளும் திரிணாமூல் காங்கிரஸை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் புர்த்வானில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்பு முகாமிட்டுள்ளது பற்றி மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மௌனமாக உள்ளார். இதனால் திரிணாமூல் காங்கிரஸ் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
வங்கதேச அரசை நிலைகுலைக்க விரும்புவோருக்கு எதிராக மேற்கு வங்க அரசு கடும் நடவடிக்கை எடுப்பது இல்லை என தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடிக்கடி புகார் தெரிவித்து வருகிறார்கள். சாரதா நிதி நிறுவன மோசடிக்கும், புர்த்வான் குண்டுவெடிப்புக்கும் இடையே தொடர்பு உள்ளது என்று விசாரணை அதிகாரிகள் நம்புகிறார்கள்.
மேற்கு வங்க நிர்வாகம் அதிலும் குறிப்பாக திரிணாமூல் காங்கிரஸ் தங்களுக்கு எதிராக செயல்படுவதாக வங்கதேசம் முறைப்படி இந்தியாவிடம் புகார் அளித்துள்ளது. தீஸ்டா நீரை வங்கதேசம், மேற்கு வங்கம் பகிர எதிர்த்தவர் மமதா பானர்ஜி. தீஸ்டா திட்டம் நிலுவையில் கிடப்பதற்கு காரணம் மமதா என்கிறது வங்கதேசம். இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்த வருமாறு மத்திய அரசும், வங்கதேச அரசும் பலமுறை அழைத்தும் மமதா வரவில்லை.
வங்கதேசத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் மேற்கு வங்கத்தில் தங்க எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேசத்தை ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிரான ஜமாத் ஆட்கள் மேற்கு வங்கத்தில் கிளை துவங்கியுள்ளனர். வங்கதேச அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த மேற்கு வங்கம் அனுமதி அளித்தது.
வங்கதேசத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கவே மமதா மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய பாகிஸ்தானுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வது குறித்து மமதாவை சந்திக்க வந்த வங்கதேச தூதரை காத்திருக்க வைத்துள்ளார். அவர் முதலில் பாகிஸ்தான் தூதரை தான் சந்தித்து பேசியுள்ளார்.
அகமது இம்ரானை எம்.பி. ஆக்க வேண்டாம் என்று எச்சரித்தும் அதை மமதா கேட்கவில்லை. இம்ரான் சிமி அமைபப்புடன் உள்ள தொடர்பை பயன்படுத்தி அவாமி லீக்கிற்கு எதிராக செயல்படும் ஜமாத்திற்கு உதவியுள்ளார். இம்ரானுக்கு உள்ள சிமி தொடர்பு, ஜமாத்துக்கு உதவுவது குறித்து உளவுத் துறை கண்காணித்து வருகிறது. அவர் சாரதா நிறுவன தலைவரின் பணத்தை ஜமாத்தின் ஹவாலா மூலம் பதுக்க உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தனை எச்சரிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் திரிணாமூல் காங்கிரஸ் இம்ரானை ராஜ்யசபா எம்.பி. ஆக்கியது. வங்கதேசம் அவருக்கு எதிராக புகார் தெரிவித்ததோடு அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், நாதியா, புர்த்வான் ஆகியவை ஜமாத் ஆட்களின் விருப்ப இடங்களாக உள்ளன. சிமி ஆட்களின் ஆதரவுடன் ஜமாத் ஆட்கள் மேற்கு வங்கத்திற்குள் எளிதாக நுழைந்து விடுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் அரசு நிலங்களில் பயிற்சிப் பள்ளிகள் துவங்கியுள்ளனர்.
ஜமாத் மற்றும் சிமியின் வலியுறுத்தலால் தான் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் மேற்கு வங்கத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாம். எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அனுமதிக்காததற்கும் ஜமாத்தின் வலியுறுத்தல் தான் காரணமாம்.
புர்த்வான் குண்டுவெடிப்பு விவகாரத்தில் மமதா மௌனமாக உள்ளார். இது குறித்த விசாரணையில் புலனாய்வு துறையினருக்கு மேற்கு வங்க போலீசார் ஆதரவு அளிக்கவில்லை. போலீசார் ஆதாரங்களை அழிக்க முயன்றது கேமராவில் பதிவானது. இதை எல்லாம் பார்த்த பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழுவை மேற்கு வங்கத்திற்கு அனுப்பி மமதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தும்படி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.