லைட் இல்லாம வண்டி ஓட்டுற என்னை கேட்குறீங்களே, வண்டியே இல்லாதவரை கேளுங்க! இதுதான் மோடி வித்தையா?
Recommended Video

டெல்லி: எங்கள் அரசு என்ன செய்தது என கேட்காதீர்கள், முந்தைய அரசு என்ன செய்யவில்லை என கேளுங்கள் என்பதை போல நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நேற்று, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு மக்கள் இப்போது விலை கொடுக்கிறார்கள் என்று தீவிர வாக்குவாதம் நடத்தினார்.
நேரு பிரதமராக இல்லாமல் சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் முழுக்க இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.

சர்தார் பட்டேலும் இருந்தார்
சர்தார் வல்லபாய் பட்டேலும், நேருவின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்தான். நேருவுடன் பட்டேலுக்கு, கருத்து வேறுபாடு இருந்தாலும், அவரையும் அமைச்சரவையில் உள்ளடக்கியிருந்தார் நேரு. ஆனால், இப்போது திடீரென பட்டேல் பிரதமராக இருந்திருக்க வேண்டும் என்று பேசியுள்ளார் மோடி. நேரு முதல், இப்போதைய காங்கிரஸ் தலைவர் நடைமுறை வரை விளாசியுள்ளார் மோடி.

காங்கிரஸ் வரலாறு தேவையா
ஆனால், கடந்த 6 காலாண்டுகளாக ஜிஎஸ்டி குறைந்து கொண்டு சென்றதற்கான காரணத்தை மோடி தெரிவிக்கவில்லை. கடந்த 4 வருடங்களாக பாஜக அரசு எந்த சாதனையையும் செய்யவில்லை என்பதால்தான் அதுபற்றி பேசாமல் கடந்த கால காங்கிரஸ் வரலாற்றை பேசிக்கொண்டிருந்தார் பிரதமர் என்பது எதிர்க்கட்சிகள் விமர்சனமாக உள்ளது.

சாதனை அதிகம்
இதுகுறித்து பாஜகவின் ராகவன் கூறுகையில், பிரதமர் பாஜக அரசு ஆட்சி சாதனையை பற்றி பேச 1 மணி நேரம் போதாது என்பதால் அதிகமாக அதை பற்றி பேசவில்லை. பொருளாதார ஆய்வறிக்கையில் அதுகுறித்து தெளிவாக தெரிவித்தாகிவிட்டது. ஜிடிபி 7 சதவீதத்தை விட அதிகரிக்கப்போகிறது என்பது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொருளாதார நிலை குறித்து, தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் ராகவன்.

ஜிடிபி வளருமா?
ஆனால், கச்சா எண்ணை விலை குறைவாக இருந்த காலகட்டத்திலேயே ஜிடிபி வளரவில்லை. அதுதான் ஜீவநாடி. ஆனால், இப்போது கச்சா எண்ணை விலை விண்ணை முட்டியுள்ள நிலையில் இனிமேல் ஜிடிபி கூடப்போவதில்லை என்பது பொருளாதார நிபுணர்கள் கருத்தாக உள்ளது. தேர்தலுக்கு முன்பாக இந்தியாவை தலைகீழாக புரட்டிப் போடுவேன் என்று கூறிய மோடி, இப்போது, முந்தைய ஆட்சியின் பலவீனங்களை பட்டியலிடுவது ஏன் என்ற கேள்வி மட்டும் விடையளிக்கப்படாமல் தொக்கியே நிற்கிறது.












Click it and Unblock the Notifications