6 வாரமாக சும்மா இருந்து விட்டு இப்போது தூங்கி எழுந்து வரும் மத்திய அரசு.. பரிதாப தமிழகம்!
6 வாரமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு இப்போது மத்திய அரசு காவிரி விவகாரத்தில் சந்தேகம் கேட்கிறது.
டெல்லி: காவிரி விவகாரத்தில் 6 வாரங்களாக மத்திய அரசு சும்மா இருந்துவிட்டு தற்போது மத்திய அரசு காவிரி விவகாரத்தில் சந்தேகம் கேட்டு தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவாகரத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டதே இல்லை என்பது எழுதப்படாத நடவடிக்கை. அதுபோல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட எந்த தீர்ப்பையும் கர்நாடக அரசு மதித்ததில்லை.
காவிரி விவகாரத்தில் தமிழகம் எதிர்பார்த்தபடி தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்காவிட்டாலும் கூட நீரை ஒழுங்குமுறைப்படுத்த திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திட்டம் என்பது வாரியம்
உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும் அதை மத்திய அரசு அமல்படுத்த முன்வரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என்று தமிழக பாஜகதான் மத்திய பாஜகவுக்கு சப்பைக்கட்டு கட்டி வருகிறது. ஆனால் செயல்படுத்தியபடி தெரியவில்லை.
திட்டம் என்றால் என்ன
இதனிடையே கர்நாடக அரசோ உச்சநீதிமன்றம் கூறியுள்ள திட்டம் என்றால் அது காவிரி மேலாண்மை வாரியம் என்றில்லை, வேறு எந்த திட்டமாகவும் இருக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட எந்த ஒரு திட்டத்தையும் குறிப்பிடவில்லை என்பது கர்நாடக அரசின் வாதம்.
கர்நாடக தேர்தல்
கர்நாடக சட்டசபை தேர்ல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநில மக்களை பகைத்து கொள்ள மத்திய அரசு விரும்பாததால் 6 வாரக் காலத்தை வீணடித்து வந்தது. ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை நிறுத்த உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட நிலையில் அந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்திய மத்திய அரசு காவிரி விவகாரத்தில் காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பது என்ற முடிவுக்கு செய்துள்ளது பக்கா அரசியல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது.
மனு தாக்கல்
திட்டம் என்றால் குழுவா வாரியமா என விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்கிறது. இதனால் தமிழகம் கடும் கொந்தளிப்பில் உள்ளது. வழக்கம் போல் காவிரி விவகாரத்தில் பட்டை நாமம் போட மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. இதனால்தான் நாளை கெடு முடியவுள்ள நிலையில் மத்திய அரசு விளக்கம் கேட்க முன்வந்துள்ளது.
தற்போது சந்தேகம்
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல் காலக் கெடு இருந்த நிலையில் தூங்கி எழுந்துவிட்டு தற்போது விளக்கம் கேட்டு தாங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் பேர்வழி என்பதை காட்டி கொள்ளவே இந்த நாடகத்தை மத்திய அரசு நிகழ்த்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு நாளை அவமதிப்பு வழக்குக்கு ஆளாக நேரிடும் என்பதால் இது போன்ற கண்துடைப்பு நாடகத்தை பாஜக நடத்துகிறது என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.