மகாராஷ்டிரா அரசியல்.. இனிதான் முக்கிய கட்டம்.. பாஜக ஆட்சி என்னவாகும்?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று அதிகாலையில், அதிரடியாக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், அக்கட்சி தலைவர் சரத் பவாரின் அண்ணன், மகனுமான, அஜித் பவார், துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர்.
இது மிகப்பெரிய திருப்பம்தான் என்றாலும், இந்த கதை இத்தோடு முடியவில்லை. சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, அரசின் தலைமீது கத்தி தொங்குவதாகத்தான் அர்த்தம்.
நவம்பர் 30ம் தேதிக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக அரசுக்கு, ஆளுநர் உத்தரவிட வாய்ப்புகள் அதிகம். அதாவது எஞ்சியிருப்பது ஒரு வாரம்தான்.
அச்சுறுத்தப்பட்ட அஜித் பவார்.. பின்னணியில் யார்?.. விரைவில் சாம்னாவில் அம்பலம்- சஞ்சய் ராவத்
சட்டசபையில் எம்எல்ஏக்கள் பலம்
288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
170 எம்எல்ஏக்கள்
ஆனால், இப்போது, என்.சி.பியின் 54 மற்றும் 11 சுயேச்சை எம்எல்ஏக்கள், தங்களது 105 சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் தாங்கள் ஆட்சி அமைத்துள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. அதாவது, மொத்தம் 170 எம்எல்ஏக்கள் பலம் தங்களுக்கு இருப்பதாக கணக்கு காட்டுகிறது பாஜக.
11 பேர் என்கிறார் சரத்பவார்
அதேநேரம், சரத்பவாரோ, என்சிபியின் சுமார் 10 அல்லது 11 எம்எல்ஏக்கள்தான், அஜித் பவார் பின்னால் போயுள்ளதாகவும், சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க தயாரித்து வைத்திருந்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை, எடுத்து சென்று அஜித்பவார், ஆளுநரிடம் வழங்கிவிட்டதாகவும் குண்டை தூக்கி போட்டுள்ளார் சரத் பவார்.
அடுத்த திருப்பம்
பவார் சொல்லும் கணக்குப்படி, அதிகபட்சம் 11 எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் போனதாக வைத்துக் கொண்டால், 127 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் பாஜகவுக்கு கிடைக்கும். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க தேவை 145 எம்எல்ஏக்கள் என்பதால், ஆட்சி கலையும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இவ்வளவு செஞ்ச நாங்க அதுக்கு ஏதாவது செய்யாமலா போய்விடுவோம் என்ற தோரணைதான், பல பாஜக தலைவர்களின் பேட்டிகளில் எதிரொலிக்கிறது. எனவே, பாஜக கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்குமா அல்லது, கவிழுமா என்பதுதான் மகாராஷ்டிரா அரசியலின் அடுத்த திருப்பமாக இருக்க போகிறது. காத்திருப்போம்.