ஜெ. வழக்கில் அப்பீலுக்கு போகுமா கர்நாடக அரசு? சட்ட அமைச்சர் செல்போன் சுவிட்ச் ஆப்!
பெங்களூரு: ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமா என்பதில் மர்மம் நீடிக்கிறது.
கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பு, இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட் செல்ல முடியும். ஆனால் இருதரப்பும் இன்று மதியம் வரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.
அரசு தரப்பு வக்கீல் ஆச்சாரியா அளித்த பேட்டியில், தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து பார்த்துவிட்டு அரசுக்கு அறிக்கை தர உள்ளேன் என்று கூறினார்.
ஆச்சாரியா அளிக்கும் அறிக்கையை வைத்துதான், மேல்முறையீடு செய்வதா வேண்டாமா என்ற முடிவுக்கு கர்நாடக அரசு வரும் என்று தெரிகிறது. 918 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை ஆச்சாரியா தலைமையிலான சட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்ய உள்ளது. ஆதாரங்களை திரட்ட முடியாது என்று தெரிந்தால், பேசாமல் ஜகா வாங்கவே கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மேல்முறையீடு குறித்த விவரம் கேட்க தமிழ் பத்திரிகையாளர்கள், கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தலைமைச் செயலகமான விதானசவுதாவிலுள்ள அமைச்சருக்கான அறையிலும் ஜெயச்சந்திரா இல்லை.