நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது... நோட்டுக்காக வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்
டெல்லி: பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது தொடர்பாக எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். மேலும் புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார். புதிய நோட்டுகளை மாற்ற பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் அவையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரூபாய் நோட்டுகள் விவகாரத்தை ஒருமித்த குரலில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து முடிவு செய்ய காங்கிரஸ் உள்பட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க. உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இன்று பேரணியாக சென்று, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து குடியரசுத்தலைவரை சந்தித்துப் பேசலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆலோசனை தெரிவித்து இருந்தார். இதை தேசிய மாநாட்டுக்கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள்ஆமோதித்தன. மற்ற கட்சிகளுக்கு இதில் உடன்பாடு இல்லை. உடனடியாக குடியரசுத்தலைவரை சந்திப்பது நல்லதல்ல. அரசு என்ன சொல்கிறது என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடக் கூடாது என்று அக்கட்சிகள் கருத்து தெரிவித்தன.
எனவே இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசின் பதிலை கேட்டு தர்ணா நடத்தும் என தெரிகிறது. அரசு திருப்தியான பதிலை அளிக்காவிட்டால் நாடாளுமன்ற தொடரையே முடக்கவும் வாய்ப்புள்ளது.