ஹைதராபாத் பஸ்களில் ஆண், பெண் இருக்கையை பிரிக்க 'கம்பி வலை': சென்னைக்கும் வருமா?
அரசு பேருந்துகளில் பெண்கள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தாலும் பலர் அந்த இருக்கைகளில் தான் சென்று அமர்வார்கள். கேட்டால் வாய் கிழிய வியாக்கியானம் பேசுவார்கள். பெண்கள் இருக்கையில் ஆண்கள் கூட்டத்தை பார்க்கலாம். அவர்களுடன் பேசி மல்லுக்கட்ட முடியாமல் பல பெண்கள் நின்று கொண்டு பயணம் செய்கிறார்கள்.
மேலும் நிற்கும் பெண்கள் மீது உரசுவது, கூட்டம் அதிகமாக இருந்தால் அதை பயன்படுத்திக் கொண்டு சில்மிஷம் செய்வதற்கு என்றே சிலர் பேருந்தில் பயணம் செய்கிறார்கள்.
இந்நிலையில் தான் ஹைதராபாத்தில் வசிக்கும் பெண்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கைகளை வயர் மெஷ்ஷால் தடுத்து பிரித்துள்ளனர். கண்டக்டர் சென்று வர மட்டும் ஸ்லைடிங் கதவு உள்ளது. இதன் மூலம் ஆண்கள் பெண்கள் இருக்கை பக்கம் வரவே முடியாது.
பேருந்தின் முன்புறம் உள்ள 4 வரிசைகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு வயர் மெஷ் போடப்பட்டுள்ளது. இந்த புதிய ஏற்பாட்டால் தினமும் பேருந்தில் செல்லும் பெண்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வயர் மெஷ் பிரிவினையால் குடிகாரர்கள் பேருந்தில் பெண்களிடம் பிரச்சனை செய்வது இல்லாமல் இருக்கும் என்று கண்டக்டர்கள் தெரிவித்துள்ளனர். நல்ல யோசனையாக உள்ளதே, நம் சென்னை பேருந்துகளிலும் இது போன்று வயர் மெஷ் வைத்தால் நன்றாக இருக்குமே.