மருமகளுக்கு சிறுநீரக தானம் கொடுத்த மாமியார்! மும்பையில் நடந்த அதிசயம்!!
மும்பை: மாமியார்- மருமகள் என்றாலே ஓயாத சண்டைதான். எதிர் எதிர் தீவுகள் என்றெல்லாம் கூறப்படுவதுண்டு.
ஆனால், மும்பையில், மாமியார் ஒருவர், தன் இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.
சொந்த மகளுக்கோ, தாய்க்கோ சிறுநீரக தானம் கொடுப்பது அதிசயமான விசயமில்லை. ஆனால் மருமகளுக்கு மாமியார் சிறுநீரகத்தை தானம் செய்த சம்பவம் அதிசயமாக பேசப்படுகிறது.
சிறுநீரக பழுது
மும்பையை சேர்ந்த வைஷாலி ஷாவுக்கு, 35, காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. இதனால் அவரது கணவர், மணிஷ் மனம் உடைந்து போனார் உடனடியாக, மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் சோதனையாக கணவரின் சிறுநீரகம் பொருந்தவில்லை.
நல்ல மாமியார்
வைஷாலியின் கணவர் கவலை அடைந்திருந்த அவரது தாயாரும் வைஷாலியின் மாமியாருமான சுரேகா ஷா, 59, தன் சிறுநீரகத்தை, மருமகளுக்கு தானம் கொடுக்க முன்வந்தார்.
டாக்டர்கள் ஆச்சரியம்
இதை கேட்டு, வைஷாலியும், அவரது குடும்பத்தாரும்திக்கித்து போயினர். கணவன், மனைவி, சகோதரர், சகோதரி என்ற உறவு நிலையில் தான் சிறுநீரக தானம் கொடுக்க முன்வருவர். ஆனால், மருமகளுக்கு, மாமியார் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க வந்தது, டாக்டர்களையே பிரமிப்பில்ஆழ்த்தியது.
பொருந்திய சிறுநீரகம்
சிறுநீரகவியல் மருத்துவர்கள், சுரேகா ஷாவை பரிசோதித்து பார்த்தனர். அவரது சிறுநீரகம், வைஷாலிக்கு பொருத்தமாக இருக்கும் என, தெரியவந்தது.இதையடுத்து, கடந்த மாத இறுதியில் மும்பையில் அறுவை சிகிச்சை நடந்தது. இதில், வைஷாலிக்கு வெற்றிகரமாகமாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. மருமகளும், மாமியாரும், சிகிச்சை முடிந்து சில நாள் ஓய்வுக்கு பின் இல்லம் திரும்பியுள்ளனர்.
கண்ணீருடன் நன்றி
எனக்கு உயிர் பிச்சை அளித்துள்ள, என் மாமியாரை தெய்வமாக பார்க்கிறேன். அவருக்கும், டாக்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்கிறார் வைஷாலி.
ஆண்டவனுக்கு நன்றி
என் சிறுநீரகம், மருமகளுக்கு பொருந்தியதற்காக ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மருமகளுக்கு புது வாழ்க்கை கிடைத்துள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு, மக்கள் தயங்க கூடாது. உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும் என்கிறார் சுரேகா ஷா.
5 லட்சம் நோயாளிகள்
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவோர், நாடு முழுவதும், 4 லட்சம் முதல் 5 லட்சம் பேர். இதில், 5,000 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
டயாலிசிஸ்
பாதிக்கப்பட்டுள்ளவர்களில், 96 சதவீதத்தினர் போதுமான சிகிச்சை பெறுவதில்லை. சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களில், 3 முதல் 4 சதவீதத்தினர் மட்டுமே, டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர். சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி டயாலிசிஸ் செய்வதற்காக பணத்தை செலவிடுவதை காட்டிலும், மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.
ஹீரோயின் மாமியார்
மாமியார்என்றாலே, சினிமா, சீரியல்களில் வில்லியாக சித்தரிக்கப்படும் நிலையில், சுரேகா ஷா அந்த எண்ணத்தை மாற்றி, தன்னை போன்ற மாமியார்களுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.