இலங்கைக்கு அனைத்து விதங்களிலும் நெருக்கடி தர வேண்டும்- டெஸ்மான்ட் டுடு
டெல்லி வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது குறித்த விவாதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு விரிவாகப் பதிலளித்தார் டுடு.
டுடு கூறுகையில், காமன்வெல்த் மாநாடு, இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நல்ல களமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. நிச்சயம் தமிழ் சமுதாயத்தினரின் உரிமைகள் குறித்தும், அவர்களது மறுவாழ்வு குறித்தும், மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விவாதிக்க முடியும், தீர்மானங்கள் போட முடியும்.
அதேசமயம், மாநாட்டை புறக்கணிப்பது என்ற முடிவும் கூட ஒரு நல்ல விஷயம்தான். இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை அர்ப்பணிப்பு உணர்வோடும், உண்மையாகவும் கடைப்பிடிக்கவில்லை என்ற கருத்து வரும்போது நிச்சயம் உலகநாடுகள் இலங்கை மீது அனைத்து விதமான நெருக்கடிகளையும் தர வேண்டும். அதில் மாநாடு புறக்கணிப்பும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள் இலங்கைக்கு நிறைய அறிவுறுத்த முடியும். எங்களது நாடுகளில் எழுந்துள்ள எதிர்ப்புகளையும் மீறி நாங்கள் வந்துள்ளோம். உங்களது கடமைகளை, நடவடிக்கைளை முறையாக உறுதியாக செய்யுங்கள். தமிழர்களின் நிவாரணத்திற்குத் தேவையானதை தாமதமில்லாமல் செய்யுங்கள் என்று இலங்கையிடம் நிர்ப்பந்திக்க காமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இலங்கையில் வாழும் தமிழர்களின் கூற்றுகளுக்கும், அவர்களது கோரிக்கைகளுக்கும் இலங்கை அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும்.
மாநாட்டைப் புறக்கணிப்பது ஆக்கப்பூர்வமானதா என்று கூறுவதற்குப் பதில், இலங்கை தீவிரமாக செயல்பட அதற்கு அழுத்தம் கொடுக்க உதவும் என்றால் புறக்கணிப்பு முடிவும் சரியானதுதான் என்றார் டுடு.